Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கைது! 

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

Four arrested in trichy

 

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தமிழன் என்பவர் திருமண மண்டபங்களில் டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் மேலகல்கண்டார் கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்திமுனையில் அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

 

அதனைத் தொடர்ந்து செந்தமிழன், பொன்மலை காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்தது குறித்து புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில் பூபாலன் என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தமிழனிடம் பணம் பறித்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.  

 

இச்சம்பவம் மட்டுமின்றி பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், பாலக்கரை என திருச்சி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் முறையே கௌதம், அய்யனார், சுரேஷ் ஆகிய நபர்களிடம் நடந்த வழிபறிகளில் ஈடுபட்ட செந்தில்குமார், ஜாகீர் உசேன் மற்றும் நாகராஜ் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், பொன்மலைப்பட்டி பகுதியில் கௌதம் என்பவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த செந்தில்குமாரிடம் இருந்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.