நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதே சதுரகிரி ஆகும். மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் இருந்தும் சதுரகிரிக்குச் செல்வதற்கு மலைப்பாதைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியில் அமைந்துள்ள மலைக்கோவில்தான் சுந்தர மகாலிங்கம் கோவில். விசேஷ நாட்களில் பக்தர்கள் இக்கோவிலுக்கு படையெடுப்பர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்படும் மழைப்பொழிவால் ஓடைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிக்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் கோவிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கும். அதேபோல் நிலைமை சீரானவுடன் அனுமதியும் வழங்கப்படும். இந்நிலையில் இன்று சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 1977-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடி அமாவாசை விழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்களில் 100 பேர் வரை பலியானார்கள். 2015-ல் வைகாசி வெள்ளிக்கிழமை விழாவை முன்னிட்டு இம்மலைக்கு வந்த பக்தர்கள் திடீர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.