Skip to main content

விபத்தில் பலியான தந்தை, மகள் - உறவினர்கள் சாலை மறியல்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Father and Daughter passed away in accident

 

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகில் உள்ள சேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம்(58). இவரது மகள் தேன் குழலி(25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், இரவு 9 மணி அளவில் திருக்கனூர் கடைவீதியில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை நீலமேகம் ஒட்டிக் கொண்டு வந்தார். 

 

இந்நிலையில், கொடுக்கூர் ஏரிக்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கருங்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் தூக்கி எறியப்பட்ட தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற லாரியை உடனடியாகக் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி இரவு 11 மணி அளவில் மறியலைக் கைவிட்டனர்.

 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 8 மணி வரை விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் கண்டுபிடிக்காததால் கோபமுற்ற கிராம மக்கள், இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி மற்றும் அப்பகுதி ஒன்றிய சேர்மன் வாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அப்போது மக்கள், ‘லாரியை பறிமுதல் செய்ய வேண்டும். டிரைவரையும் கைது செய்து ஜாமீனில் வரமுடியாத அளவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் திருவக்கரை சாலை பகுதிகளில் டிப்பர் லாரியால் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர். அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். 

 

அதேசமயம், விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியையும், அதன் டிரைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று நீலகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்வதை மருத்துவர்கள் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.