Skip to main content

உடல் முழுக்க எண்ணெய் பூசி, முகத்தில் மாஸ்க்! - திருடர்களால் பீதிக்குள்ளாகும் மக்கள்

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 


செயின் திருட்டு, தாலி கொடி அறுப்பு, வீடு புகுந்து கொள்ளை என குற்றச் செயல்கூடிவிட்ட நகரமாக மாறிவிட்டது ஈரோடு நகரம். தொடர் சம்பவங்களில் இன்று அதிகாலை நடந்த திருட்டு சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.    

o


  
ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில்  எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி.  இவரது மனைவி ராணி.  இவர்களுக்கு கோபால், நந்தகுமார் என 2 மகன்கள் உள்ளனர்.  சுப்பிரமணி நேதாஜி தினசரி மார்க்கெட்டில்  பழ மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.  சுப்பிரமணியனின் சகோதரர் மாதேஸ்வரன்.  இவரது மகள் மோனிகா.  மாதேஸ்வரன் நாராயணவலசில்  குடி இருந்து வருகிறார்.  சுப்பிரமணியன் வீடு ஒரு மாடி கொண்டது.  முதல் மாடியில் சுப்பிரமணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  கீழ்ப்பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் பகுதியில் மூஸ்தரி என்ற மூதாட்டி தனது மகன், மருமகளுடன் குடியிருந்து வருகிறார்.

 

சுப்பிரமணியன் அண்ணன் மகள் மோனிகாவிற்கு  மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.  இது சம்பந்தமாக  கடந்த 3ஆம் தேதி மேட்டுப்பாளையத்திற்கு  சுப்பிரமணியன் மட்டும் அவரது அண்ணன் மாதேஸ்வரன் குடும்பத்துடன் சென்று விட்டனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில்  2 மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் உடல் முழுக்க எண்ணெய் பூசியிருந்தனர்.  மேலும் அவர்கள் உள்ளாடையான வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்துள்ளனர். வெளியே இரண்டு பேர் அதே நிலையில் இருந்துள்ளனர்.  வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ 50 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 17 பவுன் நகையை கொள்ளையடித்தனர். 

 

பின்னர் கீழே இறங்கி வந்த அந்த மர்ம நபர்கள்  மூதாட்டியின் வீட்டு ஜன்னல் ஓரமாக சென்று பார்த்துள்ளனர்.  அப்போது மூதாட்டி தூங்கிக்கொண்டிருந்தார்.  பின்னர் திடீரென வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.  சத்தம் கேட்டு  மூதாட்டி மூஸ்தரி எழுந்தார்.  உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.  சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து கூச்சல் போட்டனர்.  அதற்குள் மர்ம நபர்கள் நான்கு பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

 

இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிய வர, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.    வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் முகத்தில் மாஸ்க்கும் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து வந்ததாக மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார்.  

 


போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடல் முழுக்க எண்ணெய் பூசி, ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டு பார்ப்பதற்கு அதி பயங்கரத்தை ஏற்படுத்தி மக்களை பயபீதியில் ஆழ்படுத்தும் புதிய புதிய திருடர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தொடர் திருட்டு வேலையில் ஈடுபடுவதால் அப்பாவி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்