
கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள நான்கு மற்றும் ஐந்தாவது தளங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. டாஸ்மாக் மூலமாக மதுபானங்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடக்கிறது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடைய மதுபான நிறுவன அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதி மற்றும் தியாகராய நகர் பகுதியில் இருக்கிறது. அதேபோல் அவர் தொடர்புடைய பிற இடங்களிலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.