
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் போதை ஆசாமி ஒருவர் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்த பக்தர்களிடம் மிரட்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த பொழுது கோவிலின் தெற்கு திருமஞ்சன கோபுரத்தின் வழியாக அப்பு என்கின்ற நபர் மது போதையில் உள்ளே நுழைந்துள்ளார். கையில் கத்தி வைத்திருந்த அந்த நபர் பக்தர்களை மிரட்டியபடி ஓடியுள்ளார். இதனால் அங்கிருந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி அடித்து ஓடியுள்ளனர்.
பின்னர் கோவிலின் நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த அவர் அங்கிருந்த கண்ணாடிகளையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளான். இதனைக் கண்ட கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏன் மதுபோதையில் கத்தியுடன் வந்தார் என்பது தொடர்பாக போலீசார் அப்புவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.