Skip to main content

தமிழர்களே காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள்!- தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்!

Published on 01/06/2018 | Edited on 01/06/2018


நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள் என தமிழ்த்தேசிய  பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தங்கள் வாழ்வுரிமைக்குப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு, 13 பேரை சுட்டுக் கொன்றார்கள்; அறுபதுக்கும் மேற்பட்டோரை சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் 30.05.2018 அன்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், இந்தப் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்தினார்கள் என்றும், இவ்வாறு போராட்டம் - போராட்டம் என்று நடத்திக் கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.

அரசின் கணக்குப்படி 20 ஆயிரம் மக்கள் பங்கெடுத்த போராட்டம் - உண்மையில் இதைப்போல் இரண்டு மடங்கு கூடுதலான எண்ணிக்கையில்தான் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்திய போராட்டம் என்று கொச்சைப்படுத்தியதன் மூலம் ரஜினிகாந்த் தன்னை மக்கள் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொண்டார்.

இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதில் ஓர் உட்பொருள் உள்ளது. இப்போது 13 பேரைத்தான் சுடுகாட்டிற்கு அனுப்பியுள்ளோம். இனி போராட்டங்கள் தொடர்ந்தால் அங்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி தூத்துக்குடியில் செத்ததைவிட அதிக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்புவோம் என்ற உட்பொருளில் தான் ரஜினிகாந்த் அவ்வாறு கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மக்கள் விரோதி - தமிழர் விரோதி என்பதைப் புரிந்து கொண்டோம்! திரைப்படக் கொள்ளை வசூல் மட்டுமே அவரின் லட்சியம் என்று தெரிகிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். - மோடி குரலைத் தான் வெளிப்படையாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாக ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று தமிழ் நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க வேண்டும். காலா படத்தைப் பார்க்க மாட்டோம் எனத் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கர்நாடகத்தைப் பாருங்கள்! காவிரிச் சிக்கலில் ஒப்புக்கு அரைகுறையாகத் தமிழ்நாட்டு உரிமை பற்றி ரஜினிகாந்த் பேசினார். அதற்காகக் கர்நாடகத்தில் காலா படம் திரையிட அனுமதியில்லை என்று ஒட்டு மொத்தக் கன்னடர்களும் அரசும் முடிவெடுத்துள்ளார்கள்.

தமிழர்களே ஏமாந்தது போதும்; விழித்துக் கொள்வீர்! கன்னட நாட்டு ரஜினிகாந்தின் காலா படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர்கள்!  “கருப்பு” என்பதை இந்தியில் “காலா” என்று பெயர் வைத்துள்ளார். தமிழ்த் திரைப்படத்திற்கு இந்திப் பெயரா? சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்