Skip to main content

வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை! கோட்டாட்சியர் விசாரணை! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

CUDDLAORE DISTRICT PREGNANT INCIDENT POLICE INVESTIGATION

 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள ஓணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள் வினிதா (25), எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தெருவைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வினிதா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  
 


இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்ததுடன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் (20/05/2020) குடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ராஜன் தனக்குப் பணம் வேண்டும் எனத் தகராறு செய்துள்ளார். 

இதனால்  விரக்தியடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

 


ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (21/05/2020) பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் சிகிச்சையின்போது வினிதா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகமாக வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வினிதாவின் மரணம் குறித்து அவரது தாயார் செல்வி குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 'திருமணத்தின்போது வினிதாவுக்கு சீர்வரிசையாக 20 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் கொடுத்ததாகவும், மேலும் காருக்குப் பதிலாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ராஜனுக்கு புதிதாக பைக் வாங்கித் தருமாறு ராஜனின் பெற்றோர் தங்களிடம் வலியுறுத்தினர் என்றும், அதற்கு நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறோம் என்று கூறிய நிலையில், அதை ஏற்காமல் உடனடியாக வாங்கித் தர வேண்டும் என்று தனது மகளிடம் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த வினிதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு, ராஜனின் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

http://onelink.to/nknapp


அந்தப் புகாரின் பேரில் வனிதாவின் கணவர் ராஜன், அவரது தந்தை தந்தை சேட்டு, தாயார் கஸ்தூரி, சகோதரர் ராமச்சந்திரன், சகோதரிகள் ராஜேஸ்வரி, அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார் ராஜனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து நெய்வேலி டி.எஸ்.பி லோகநாதன் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். வினிதாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் கடலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.



 

 

சார்ந்த செய்திகள்