Skip to main content

மத்திய சிறையில் ரெய்டு; சிக்கிய குற்றவாளி - ஜெயிலர் வீட்டுக்கு தீ வைப்பு... காவல்துறை விசாரணை

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Cuddalore Central Jail Assistant Jailor's house set on fire

 

கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மத்திய சிறைச்சாலை. இந்த சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில் உயர் பாதுகாப்பு அறை, பாதுகாப்பு அறை, பொது அறைகள் என சிறையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் உயர் பாதுகாப்பு அறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களும், பாதுகாப்பு அறையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மத்திய சிறையில் உதவி  ஜெயிலராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் சிறை அருகிலேயே உள்ள சிறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் இவரது மனைவி பவ்யா, 2 மகன்கள் மற்றும் தந்தை ராமலிங்கம், தாய் சாவித்திரி ஆகியோரும் வசித்து வருகின்றனர். மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான சுவாமிமலைக்கு சென்றிருந்தார். வீட்டில் மற்ற அனைவரும் இருந்தனர். 

 

Cuddalore Central Jail Assistant Jailor's house set on fire

 

இந்நிலையில் நேற்று (28.8.2022) அதிகாலை வீட்டின் ஒரு அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது மணிகண்டனின் தாயார் சாவித்திரி பாத்ரூம் செல்வதற்காக எழுந்துள்ளார். அப்போது பெட்ரோல் வாசனை அடித்ததால் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். சமையலறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின் பகுதியில் சிலர் தப்பி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

அவர் கூச்சலிட்டதை கேட்டு வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சமையல் கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக வெளியே அப்புறப்படுத்தினர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து  தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயில் சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகியது. 

 

இதுகுறித்து கடலூர் முத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டின் அருகிலேயே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில்கள் கிடந்ததால் இது திட்டமிட்ட தீவைப்பு என்பதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடலூர் மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது 18 கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள எண்ணூர் தனசேகரன் என்ற பிரபல ரவுடியிடம் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கைப்பற்றப்பட்டவுடன் எண்ணூர் தனசேகரன் மணிகண்டனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மணிகண்டனை தாக்க வந்துள்ளார். இதையடுத்து அவரை கண்டித்த மணிகண்டன் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்ததால் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

Cuddalore Central Jail Assistant Jailor's house set on fire
தனசேகரன்

 

இந்த நிலையில் தனசேகரனின் வழக்கறிஞர்கள் அடுத்த 2 நாட்கள் கழித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் எண்ணூர் தனசேகரனை ஜெயிலர் மணிகண்டன் தாக்கியதாகவும், அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவை முதுநகர் போலீசார் வாங்க மறுத்ததால் அதனை தொடர்ந்து தாங்கள் மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து புகார் செய்ய போவதாக தெரிவித்து சென்று விட்டனர். 

 

இந்த நிலையில் இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு எண்ணூர் தனசேகரனின் கூலிப்படை தான் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி, சிறைத்துறை டி.ஐ.ஜி தாமரைக்கண்ணன், மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். சிறை காவலர் குடியிருப்பில் உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.