Skip to main content

“பானி பூரி கடை நடத்தக் கூடாது என போலீஸ் தரக்குறைவாக பேசுகிறார்கள்” - தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியர் 

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

couple selling panipuri engaged in a dharana against the police

 

பானி பூரி கடையை நடத்தக் கூடாது என தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி. இவரது கணவர் அரவான். இவர்கள் அரியமங்கலத்தில் தனியார் கல்லூரி அருகே தள்ளு வண்டியில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் பானிபூரி கடையை காலி செய்ய வேண்டும் என மிரட்டுவதாகக் கூறி அபிராமி அரவான் தம்பதியினர் நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

 

இது குறித்து பானிபூரி கடை நடத்தி வரும் அபிராமி அரவான் தம்பதியினர் கூறுகையில், “நாங்கள் கடந்த 9 வருடங்களாக எஸ்.ஐ.டி கல்லூரி அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் யாரும் கடை நடத்தக் கூடாது என எஸ்.ஐ.டி கல்லூரி நிர்வாகத்தினர் வேலி அமைத்து இருந்தனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்து கடையை நடத்த அனுமதி வாங்கி நேற்று முன் தினம் (01.03.23) கடையை தொடங்கினோம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடையை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் பிராத்தல் வழக்குப் பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

 

இது குறித்து நேற்று காலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். புகார் அளித்த சிறிது நேரத்தில் எங்களது பானிபூரி கடையின் வண்டியை எடுத்து சென்றுவிட்டனர். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் எங்களை மிரட்டி வரும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வாழ வழியில்லை எங்களை கொன்று விடுங்கள் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.