Skip to main content

மீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது!- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

coronavirus lockdown government chennai high court


கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 500 ரூபாய் வழங்க வேண்டும் என மீனவர்கள் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.


கரோனா பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு,  மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி நாட்டுப் படகுகளை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதிக்கக் கோரி, மீனவர்கள் நலப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அச்சங்கத்தின் மனுவில், ஊரடங்கு காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், மீன்பிடி தடை காலத்தில் நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்,‘கரோனா வைரஸ் பரவலால் மீனவர்கள் சமுதாயம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க இயலாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்பிடி தடை காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 83.55 கோடி ரூபாய் நிவாரண உதவியாக 13 கடலோர மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 63 ஆயிரத்து 265 மீனவ குடும்பங்களுக்கு 92.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித் தடைக் காலத்தை 61 நாட்களிலிருந்து 41 நாட்களாகக் குறைந்துள்ளதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீனவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்