Skip to main content

"கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"- சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேட்டி!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

 

coronavirus cuddalore district special officer inspection

 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், மாவட்ட அளவிலான தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மாவட்டந்தோறும் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்து உள்ளது. 

 

அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு கண்காணிப்புச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகளிடம் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று (26/06/2020) கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்டத்திற்கு வந்தார். 

 

நேற்று (26/06/2020) காலை கடலூர் மாவட்ட எல்லையான சின்ன கங்கணங்குப்பம் சோதனைச் சாவடிக்கு வந்தவர், சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் கடலூர் நகராட்சியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளான ஆல்பேட்டை, திருப்பாப்புலியூர், வெள்ளி மோட்டான் தெரு ஆகிய கண்காணிப்புப் பகுதிகளை ஆய்வு செய்தார். 

 

மதியம் சிதம்பரம் மீதிகுடி நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பகுதிகளில் ஆய்வு செய்தவர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கோல்டன் ஜுப்ளி ஹாஸ்டலை பார்வையிட்டார். அதன்பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, கண்ணீருடன் கலங்கி நின்ற கரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும், ஆறுதலும் கூறினர். சிதம்பரத்திற்குச் சென்ற ககன்தீப்சிங் பேடியை நடராஜர் கோவில் டிரஸ்டி கைலாச சங்கர தீட்சிதர் உள்பட 3 தீட்சதர்கள் சந்தித்து ஆனித்திருமஞ்சன விழாவில் பொதுமக்கள், சிவனடியார்கள் பெண்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்து அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

 

மாலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் இரண்டு மாதங்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், வியாபாரிகள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிப்பதுடன் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

coronavirus cuddalore district special officer inspection

 

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட உதவ வேண்டும். கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 

பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கடந்த 10 நாட்களாக யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தைக் கண்டிப்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

 

அதன்மூலம் அவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர், உமிழ்நீர்ப் பரிசோதனைக் கருவி, N-95 முகக்கவசம் போன்றவைகள் இருக்கிறதா? குறைபாடுகள் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

தொற்றுடையர்வர்கள், சிகிச்சை பெற்றவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க 10 நாட்கள் கபசுர குடிநீர் கண்டிப்பாகப் பருக வேண்டும். மேலும் சிங் மாத்திரை உட்கொள்ள வேண்டும். பொதுமக்களும் சரியான விதத்தில் கபசுர குடிநீர் பருகலாம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Ministers inspect the omni bus stop complex

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்திற்கு பதிலாக முடிச்சூரில் அருகே உள்ள மண்ணிவாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் வளாகத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

Ministers inspect the omni bus stop complex

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அதன்படி சேகர்பாபு பேசுகையில், “முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் 150 பேருந்துகள் நிற்கும் அளவிற்கும், 300 பேர் வரை தங்குவதற்கான இடமும், உணவகமும், அலுவலக அறைகளும், கழிவறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பணி ஏப்ரலில் நிறைவு பெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என நள்ளிரவில் போராட்டம் நடத்தியதில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன ” எனத் தெரிவித்தார். 

Next Story

மழை வெள்ள பாதிப்பு; தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் ஆய்வு!

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
 Rain and flood damage Central team inspection in Tuticorin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர் டிசம்பர் 19 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கே.பி. சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைக் கணக்கிட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை டிசம்பர் 20 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாம் கட்டமாக மத்தியக் குழுவினர் 7 பேர் ஆய்வு செய்து வருகின்றனர். கே.பி. சிங் தலைமையிலான இந்த குழுவில் ரங்கநாத் தங்கசாமி, பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, விஜயகுமார் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளனர்.