Skip to main content

மெசேஜ் அனுப்புங்க... வீடு தேடி காய்கறிகள் வரும்... தொடர்பு எண் என்ன தெரியுமா?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்கள். போலிசார் விதிகளை மீறியவர்களை பிடித்து நூதன தண்டனைகள் கொடுத்து வழக்குகள் பதிவு செய்தாலும் அன்றாடம் விதிமீறல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. 
 

மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் பல இடங்களில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புகார்களாகவும் தெரிவித்துள்ளனர்.
 

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விலைக்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை நகர மக்களுக்கு காய்கறிகள் அவர்களின் வீடுகளுக்கே கிடைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 Vegetables


 

கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை புதுக்கோட்டை நகரில் உள்ள மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தின் கீழ் 9443675038 என்ற எண்ணில் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர்களின் வீட்டுக்கே கூட்டுறவு சங்க ஊழியர்கள் காய்கறிகளை கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள். 
 

அதாவது ரூ. 150 மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கும் ரூ. 200 மதிப்புள்ள காய்கறித் தொகுப்பு ரூ. 150 க்கும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் நேரிலும் சென்று ஆய்வு செய்தார். 
 

இதே போல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் காய்கறிகளை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து வீட்டுக்கு வீடு காய்கறிகள் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் காய்கறிக்காக வீட்டைவிட்டு வெளியே வருவோர் எண்ணிக்கை குறையும் என்று கூறும் விவசாயிகள், இதே போல வாழைப் பழங்கள், பலாப் பழங்கள் உள்ளிட்ட பழங்களையும் கொள்முதல் செய்து விற்பனை செய்தால் விவசாயிகள் நட்டமின்றி வாழலாம் என்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்