கரோனா நிவாரணப் பணிகளில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இறங்கியுள்ள நிலையில், பிரபல இலக்கிய அமைப்பான ’படைப்புக் குழுமம்’ சென்னை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் விறுவிறுப்பாகக் களமிறங்கி நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.
படைப்புக் குழுமத்தில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் தமிழர்கள் நேரடி உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதைப் போட்டிகளை நடத்தியும், விருதுகளை வழங்கியும், படைப்பாளர்களின் நூல்களை வெளியிட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய படைப்பாளிகளுக்கு நிதி உதவி வழங்கியும், தன் ஈரம் மிகுந்த இலக்கியப் பணியைத் தொய்வின்றித் தொடரும் இந்த அமைப்பு, கடந்த கஜா புயல் நேரத்திலும் களமிறங்கி ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி, பாராட்டுகளைக் குவித்தது.
அதேபோல் இப்போதும், தொற்று ஆபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கரோனா களத்தில் சிறப்பாகச் சேவை புரிந்துவருகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய படைப்புக் குழும நிறுவனர் முகம்மது அலி ஜின்னா, “ஊராரின் உலைகொதிக்க உழைக்கும் விவசாய மக்களும் இன்று, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒருவேளை சோற்றுக்கு கையேந்துவதை பார்க்கும் போது, இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. நோயை மட்டுமே பார்த்துப் பயந்த மக்கள் இன்று, பசியைப் பார்த்து பயந்து நிற்கிறார்கள்.
அதனால் படைப்புக் குழுமம், முடிந்தவரை அரிசி, மளிகைப் பொருட்களை வழங்குவதோடு, பசியில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு, கே.பி.எம். கேட்டரிங் நிறுவனம் மூலம் தரமான உணவைத் தயாரித்து, நாள்தோறும் வழங்குவதைத் திருப்பணியாகக் கருதி செய்துவருகிறது.
அதேபோல், கரோனா தடுப்புப்பணியில், தங்களின் பசியைக் கூட பொருட்படுத்தாமல், ஈடுபட்டுவரும் காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரையும் தேடித் தேடிச் சென்று, பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, குடிநீர் பாட்டிலுடன், உணவு வழங்கி மனநிறைவு கொள்கிறோம்.
எங்கள் படைப்புக்குழும நண்பர்கள், ஆபத்துக்கு மத்தியிலும், காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, படைவீர்ரகள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு யுனிக் ஆங்கிள் ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களும் இணைந்து, களப்பணி ஆற்றுகின்றனர்.” என்கிறார் உற்சாகமாய்.
இது போன்ற அமைப்புகளின் சேவை, ஏழை எளிய மக்களின் இதயத்தை நேரடியாகக் குளிரவைப்பதை, நம்மால் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.