Skip to main content

ஈரோடில் கரோனா தடுப்பூசி தடுப்பாடு.. 

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

Corona vaccination demand in Erode ..

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இதுவரை மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் போடப்பட்டுள்ளது. முதலில் கரோனா தடுப்பூசி, மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் போடப்பட்டு வந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 

 

இந்நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் நள்ளிரவு முதல் மக்கள் குவியத் தொடங்கினர். இதனால் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. எனினும் சில மையங்களில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையிலும், அவர்கள் சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி சென்ற வியாழக்கிழமை முதல் தொடங்கி, தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 

 

அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் 27 ந் தேதி முதல்  மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

 

இன்றும் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் மாவட்ட முழுவதும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி எப்படியாவது போடுவார்கள் என்ற நம்பிக்கையில் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபற்றிய அறிவிப்பு பலகை ஒவ்வொரு மையத்தின் முன்பும் வைக்கப்பட்டிருந்தது. நாளை தடுப்பூசிகள் வருவதைப் பொறுத்து வழக்கம்போல் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்