
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதையும் தாண்டி தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தும் கரோனா பாதிப்பு என்பது தினசரி அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருவது கவலை அளிக்கிறது. அதிமுக ஆட்சியில் தினசரி என்பது 6000 என்ற அளவிலிருந்தது. அக்ஸிஜன் வசதியைச் சரிசெய்தாலே உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்கலாம். எனவே தமிழக அரசு அதில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கேட்டு அதனைப் பெறலாம்" என்றார்.