பெட்ரோல் திருடிய போலீஸ்காரர்: வழக்கு போடாத எஸ்.ஐ. இருவரும் பணியிடை நீக்கம்
திருப்பூர் மாநகர ஆயுதப் படையில் காவலராக இருப்பவர் காளியப்பன். இவர், கடந்த வாரம் மது போதையில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காசிவிஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்துள்ளார்.
இதைப்பார்த்து விட்டு வந்த காசிவிஸ்வநாதன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, காளியப்பன் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதேபோல், அனுப்பர்பாளையம் பகுதியில் இருந்த சீனிவாசன் என்பவரின் பெட்டிக் கடையில் திருடியவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பணம் பெற்றதாக திருப்போர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிக்கண்ணன் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்படி, புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர், ஆயுதப்படைக் காவலர் ஆகிய இருவரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
சிவசுப்பிரமணியன்