Skip to main content

சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நீதித்துறை மாசுபடாமல் இருக்க நடவடிக்கை அவசியம் - நீதிபதி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Contempt of court case against Swati; Action necessary to prevent contamination of judiciary - Judge

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பி.இ. பட்டதாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த உடன் படித்து வந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். சுவாதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்தனர். தலை வேறு உடல் வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

 

கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ், அருண், குமார் என்கிற சிவகுமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, யுவராஜ் உள்ளிட் பத்து பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் மற்றும் குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் அனுபவிக்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சந்திரசேகரன், பிரபு மற்றும் கிரிதருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதையடுத்து, தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேலும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் வைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள், “கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையைப் பார்க்கும் பொழுது விசாரணையின் தொடக்க காலத்தில், சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால், திடீரென பிறழ்சாட்சியாக மாறிவிட்டார். இதனைக் கீழமை நீதிமன்றமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது.

 

நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியின் சாட்சியமானது கட்டாயம் தேவையானது. தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனத் தோன்றுகிறது. எனவே, அவரை தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 25.11.2022 அன்று ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த சுவாதி, “கோகுல்ராஜுடன் வீடியோவில் இருப்பது நானல்ல. மற்ற மாணவர்களைப் போலவே கோகுல்ராஜுடனும் பேசினேன். கோகுல்ராஜ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாது” என வாக்குமூலம் அளித்திருந்தார்.

 

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி, உங்கள் புகைப்படத்தையே உங்களுக்குத் தெரியவில்லை என்பது ஏற்புடையது அல்ல. வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான்; சாதி முக்கியமல்ல எனக் கூறினார். இதற்கு நீதிபதியிடம், தனக்கு தெரிந்ததையே கூறுவதாகவும், யுவராஜ் யாரென்றே எனக்குத் தெரியாது என்றும், வழக்கு துவங்கிய பிறகே அவரை தெரியும் என்றும் சுவாதி கூறியிருந்தார்.

 

இதையடுத்து, கொலை வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்து சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. உண்மைகளை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

 

இந்நிலையில், இன்று இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது, “மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தை மாற்றி சிசிடிவியில் தெரிவது நானல்ல என நீதிமன்றத்தில் சுவாதி கூறுவது ஏற்புடையது அல்ல. சுவாதி உண்மையை சொல்ல மறுத்துவிட்டார். சுவாதி யாராலோ மன அழுத்தத்திற்கு ஆளாகி யாரையோ காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என நினைக்கின்றோம். 

 

சுவாதியின் சாட்சி இந்த வழக்கில் முக்கியம். அவரை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சாட்சிகள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. சத்தியப்பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்போர் எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. பொய்யான சாட்சியங்களை ஏற்றுக்கொண்டால் பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. நீதித்துறை மாசுபடாமல் இருக்க, தவறான தகவலை அளிப்பவர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். பிறழ்சாட்சியான சுவாதி அதற்கான காரணத்தையாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்” என்றும் கூறினர்.

 

தொடர்ந்து இதற்கு முன் பிற வழக்குகளில் பிறழ்சாட்சியாக மாறிய நபர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது உறுதியாகியுள்ளது. 

 

மேலும், விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்