Skip to main content

காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Consumer court orders compensation to farmers for non-payment of insurance premium

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் மனைவி சரவணசுந்தரி (வயது 40), கணேசன் மனைவி பத்மபிரியா (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்தமாக தலா இரண்டு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த விளைநிலத்திற்கு 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 369 வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூபாய் 738 என சரவணசுந்தரியும், பத்மபிரியாவும் காப்பீட்டு பிரீமியமாக செலுத்தினர். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18,142 ரூபாய் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் சரவணசுந்தரிக்கும், பத்மபிரியாவுக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

 

இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் வழக்கு நிலுவையில் இருந்தபோது சரவணசுந்தரிக்கு காப்பீட்டு நிறுவனம் 35,256 ரூபாய் காலம் தாழ்த்தி வழங்கியது. மீதி தொகையான ரூபாய் 1,136 வழங்கவில்லை. மேலும் அதற்கு எவ்வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.


இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

 

அதில், காப்பீட்டு நிறுவனம் சரவணசுந்தரிக்கு காலதாமதமாக காப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளதால் நுகர்வோர் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதனால் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய மீதித் தொகையான ரூபாய் 1,136 மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 2000 ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

 

இதேபோல் பத்மபிரியாவுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 36,284 இழப்பீட்டுத் தொகையையும், ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு ரூபாய் 25 ஆயிரமும் நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 5000 ஆகியவையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 


இதேபோல் நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரிந்து வந்த காமராஜ் என்பவர் தபால் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேர்ந்து மாதாமாதம் தன்னுடைய சம்பள கணக்கில் இருந்து என்.எல்.சி நிறுவனம் பிடித்தம் செய்யும் 3 சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளார். 3 பாலிசியில் ஒரு பாலிசி தொலைந்து விட்டதால் அதன் நகலை வழங்க வேண்டுமென தபால் துறையை அணுகினார். தொலைந்த பாலிசி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான பாலசுப்பிரமணி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. 


உடனே காமராஜ் தபால் துறையை தொடர்பு கொண்டு தான் மாதந்தோறும் 1150 ரூபாய்  சுமார் ஆறு வருடங்களுக்கு பிடித்தம் செலுத்தப்பட்ட தொகை ஆன 66,700  வட்டியுடன் கொடுக்க வேண்டும் என கேட்டபோது தபால் துறையினர் என்.எல்.சி நிர்வாகம் தவறான தொகையை பிடித்து வங்கியில் செலுத்தினால் தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காமராஜ் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையீடு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் சேவை குறைபாடாக கருதி முதலீட்டாளர் காமராஜர் செலுத்திய தொகை 66,700 ரூபாய் அதற்குண்டான 9 சதவீத வட்டியுடன் டிசம்பர் 2009ல் இருந்து, இரண்டு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும் முதலீட்டாளர் காமராஜக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பாதிப்பிற்கு இழப்பீடாக 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையாக 10,000 என மொத்தம் ஒரு லட்சத்து 1,01,700 வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.