Skip to main content

‘மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 20/10/2024 | Edited on 20/10/2024
CM MK Stalin says My heart is full of happiness 

2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவ்வாறு சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி சுற்றுலா செல்ல உள்ள ஆசிரியர்களிடம் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (20.10.2024) திருச்சியில் சந்தித்துக் கலந்துரையாடி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த பதிவைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!. கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா?.  அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!.

CM MK Stalin says My heart is full of happiness

இந்தப் பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும், இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது!. இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்!”எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவைக் குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தங்களின் வழிகாட்டுதலால் மட்டுமே தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சாதனைகள் அனைத்தும் சாத்தியமானது. திரைகடல் ஓடியும் கல்வி எனும் திரவியம் தேடுவோம். முதலமைச்சருக்குப் புகழ் மகுடம் சூட்டுவோம். தங்களின் வாழ்த்துகள் எங்களை மென்மேலும் பயணப்பட வைக்கும். முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்