Skip to main content

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்...!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

புற்றுநோய் பாதிப்பு இந்திய அளவில் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் மாநில அளவில்  10 ஆவது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.

 

Cancer Awareness rally in Erode

 



இந்நிலையில் ஈரோட்டில் இன்று செல்வா சேரிடபிள் டிரஸ்ட், ஈரோடு கேன்சர் சென்டர்,  ஈரோடை அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளை ஆகியவை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய பேரணியை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கிவைத்தார். சம்பத் நகரில் பேரணி  நிறைவடைந்தது. இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஈரோடு கேன்சர் சென்டரில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளைத் தலைவர் சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் தலைமையில் கிளை செயலாளர் எஸ்.டி.பிரசாத், மருத்துவர் எ.பொன்மலர் ஜெ.ஜெ.பாரதி, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 



புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கே.வேலவன், ஆர்.சுரேஷ்குமார், ஆர்.மகேந்திரன் ஆகியோர் பேசினார்கள். உலகில் அனைத்து நாடுகளிலும் புற்றுநோய் மிகமோசமாக பாதித்துள்ளது. மாரடைப்புக்கு அடுத்து புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளை பொறுத்தவரை விபத்துகளுக்கு அடுத்து புற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2018 இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 4.5 கோடி பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.80 கோடி பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகில் ஆண்டுக்கு 90 லட்சமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.25 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 



ஆண்டுதோறும் 11 லட்சம் பேருக்கு புதிதாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். புற்றுநோய் பாதிப்பால் ஆண்டுக்கு 7.5 லட்சம் பேர் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதுதான் கொடுமையான செய்தி.  இதன்படி இந்தாண்டுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 1 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்து கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் வரை புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு மாவட்டம், மாநில அளவில் 10ஆவது இடத்தில்  உள்ளது. ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு மாதம் தோறும் 150 பேர் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை உள்ளனர்.  இந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 11,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. அதே போல் ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக வருகிறது. புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளில் பொதுவானதாக, உடலில் உள்ள உறுப்புகளில் தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்னை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.

 



இதற்கு சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகத்தான் உள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றனர். ஈரோட்டில் புற்றுநோய் அதிகம் பரவ முக்கிய காரணமே சாய, சலவை கெமிக்கல் ஆலைகள் விஷ கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே காவிரி, பவானி, நொய்யல் ஆறுகளிலும் காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களிலும் விடுவது தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.