Skip to main content

நெல்லையில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
durai


நெல்லையில் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உதயம் ஒயின்ஸ் என்ற பெயரில் பார் நடத்தி வந்தார். இதில் மிகவும் பிரபலமான இவரை உதயம் துரைப்பாண்டியன் என்றே ஊர் மக்கள் அழைத்துவந்தனர். இதேபோல், சென்னையிலும் ரியல் எஸ்டேட் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். துரைப்பாண்டியன் அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த அவர், நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சந்திப்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைனான்ஸ் தொழிலில் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் தீவர விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

சார்ந்த செய்திகள்