தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பாஜக ஐடி விங் நிர்வாகியை நெல்லை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயகுமார்(33). இவர் கீரப்பாளையம் ஒன்றிய பாஜக ஐடி விங் தலைவராக உள்ளார். இவர் அவரது முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரை அவதூறாகச் சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்த திருநெல்வேலி திமுகவினர், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரினை வழக்காகப் பதிவு செய்த திருநெல்வேலி போலீசார், நேற்று(ஜூலை.17) இரவு கடலூர் மாவட்ட போலீசாரிடம், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தில் இருக்கும் பாஜக ஐடி விங் நிர்வாகி ஜெயகுமாரை கைது செய்ய வந்து கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில், சிறப்பு படை சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸார் ஜெயகுமார் வீட்டிற்கு இன்று(ஜூலை.18) அதிகாலையில் சென்று ஜெயகுமாரை பிடித்தனர்.
பின்னர் திருநெல்வேலியில் இருந்து சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த திருநெல்வேலி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட ஜெயகுமாரை கைது செய்த திருநெல்வேலி போலீசார் தற்பொழுது திருநெல்வேலிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து பாஜகவினர் தொடர்ந்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.