Skip to main content

இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்? -ஸ்டாலின்

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
stalin

 

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:


 ‘’ இன்று ஆகஸ்ட் 10 - தலைவர் கலைஞர்  அவர்களின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொல’ இதழ்  பிறந்த  நாள்!

தலைவர் கலைஞர் 17 வயதில் ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார். அதன் அடுத்த கட்டமாக ‘முரசொலி’யைத் துண்டு வெளியீடாக முதன்முதலில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் நாள் தான் வெளியிட்டார்.  76 ஆண்டுகள் அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை இன்னமும் தமிழர்களுக்காக முரசறைந்து வருகிறது; தொண்டர்களைத் தட்டி எழுப்பி வருகிறது. காலையில் ‘முரசொலி’ படிக்காவிட்டால் கை நடுங்கும் என்ற அளவுக்கு கழகத் தோழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்டது. எதிரிகளுக்கோ எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது.

யாரைத் தாங்கும், யாரைத் தாக்கும் என எதிரிகள் பயந்து கொண்டே தினமும் ‘முரசொலி’யைத் திருப்புவார்கள். கழகத்துக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் தலைவர் கலைஞர். தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’.

இப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்தத் தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்குச் செயல்பட்டவர்கள் நீங்கள். தலைவன் - தொண்டன் என்ற பாகுபாடுகூட இல்லாமல் தந்தை - தனயானாய்த் தான் அனைவரையும் அன்பால் அரவணைத்தார். அதனால்தான், ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய் நாம் மயங்கி நின்றோம்.

எந்தக் குரலைக் கேட்டால் நமது நாடி, நரம்பு, எலும்பு, இரத்தம் எல்லாம் புத்துணர்வு பெறுமோ அந்தக் குரலை இனி கேட்க முடியாது!

சுருள்முடி நெற்றியில் விழ, கறுப்புக் கண்ணாடி ஒளிக்கீற்றாய் பட்டுத் தெறிக்க, மஞ்சள் சால்வை கொடி போல் நம்மை வரவேற்று, முத்துப்பல் மொத்தமும் தெரிய வெடிச் சிரிப்பால் குரல் எழுப்பி, இருவண்ணக் கொடி தாங்கிய மோதிரக் கையால் முழுக்கைச் சட்டை லேசாக மடக்கித் தெரிய - நமக்குக் காட்சி தந்த கழகத்தின் பேராசானை இனி பார்க்க முடியாது!

என்ன செய்ய வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எம்மாதிரி முடிவெடுக்க வேண்டும், எவ்வழி நல்வழி என்றெல்லாம் நாளும் பொழுதும் நமக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்குத் தூண் சாய்ந்துவிட்டது.

நமக்கு வாளும் கேடயமுமாய் அவர் இருக்கிறார் என்ற ‘தைரியத்தில்’ இதுவரை நாம் இருந்தோம். அந்த தைரியம், நம்மைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டது! வெயிலில் வெந்து, மழையில் நனைந்து பல மணி நேரம் உங்கள் ஊரில் அவருக்காகக் காத்திருந்தீர்கள். இனி அவர் உங்கள் ஊருக்கு வரமாட்டார்!

‘நாளைய முரசொலியில் நமக்கு எழுதும் கடிதத்தில் நம் தலைவர் என்ன எழுதியிருப்பார்?’ என்று காதல் கடிதத்துக்கு ஏங்கியிருந்தது போல இருந்திருப்போம். இனி அவர் கடிதம் படிக்க முடியாது!

ஆனாலும் அவர், இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எவ்வளவு மணிநேரம் பேச வேண்டுமோ அவ்வளவு பேசி விட்டார்.

இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை பக்கம் எழுத வேண்டுமோ அவ்வளவு பக்கங்களை எழுதி விட்டார். அவர் எழுத்து, பேச்சும்தான் நமது கட்சி சாசனம்!

"என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவையும் நினைத்துக் கொண்டு இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்" என்று தலைவர் கலைஞர் எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் - ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்.

"வரவேற்காமல் வரக்கூடிய நோய், தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடிய சாவு, இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும், உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான் நிலைத்து வாழக்கூடியவை" என்று தலைவர் சொன்னார். தலைவர் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் செய்த செயல்கள், நிலைத்து வாழக் கூடியவை. தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கக் கூடியவை. அவர் காட்டிய வழியில், அவர் காட்டிய பாதையில் நமது பயணம் தொடரும். இதுவரை நம்மை உடலால் இயக்கியவர், இனி உணர்வால் இயக்குவார்.

அவர் இல்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. “இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்?” என்று கேட்கத் தோன்றுகிறது.

உங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல… எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன். அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளியும், சோவியத் கட்டமைப்பை உருவாக்கியவருமான ஸ்டாலின் அவர்களின் பெயரை எனக்குச் சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது காவல்துறை என்னைக் கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என்னை வார்ப்பித்தார். வளர்த்தெடுத்தார். "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.

‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற அந்த மூன்று வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். மூன்று வேளையும் என்னை இயக்கப் போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும். அந்த உழைப்பு, தலைவர் கலைஞரின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்.

‘ஏடு’தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திராவிட இயக்கம். இதனைக் கழகத் தோழர்கள் மறந்து விடக்கூடாது. கழக உடன்பிறப்புகளுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு ‘மூத்த அண்ணன்’.

தலைவர் என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட முரசொலியைப் பார்த்து தெரிந்து கொள்வதே அதிகம். அவர் இல்லாத சூழ்நிலையில் நித்தமும் வெளிவரும் முரசொலியைக் காலையில் பார்க்கும் போதும் கலைஞரின் முகம்தான் நினைவுக்கு வரும். கலைஞர் நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் ‘முரசொலி’யை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள்!’’

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.