சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி சிக்கல் காரணமாகத் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களைப் பணி நிரவல் செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 177 தொழில்நுட்ப உதவியாளர்களைத் தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவற்றுக்குப் பணி நிரவல் செய்தனர். ஆனால் இவர்களுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் என்ற பணிக்குப் பதிலாக அலுவலக உதவியாளர் என்று பணி இறக்கம் செய்து நியமித்துள்ளனர்.
இதனால் பணி செய்யும் இடங்களில் இவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவதாகவும் தொழில்நுட்ப உதவியாளர் தகுதிக்கேற்ற பணி வழங்க வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர் கல்வித்துறைக்கு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார்.