Skip to main content

“ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமர் மோடியே காரணம்” - அண்ணாமலை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Annamalai thanks PM Modi regarding Jallikattu

 

மாடுகள் மூலம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.

 

உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11, 2011 அன்று காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, அந்த தீர்ப்பை வரவேற்று, "காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது" என்று கூறினார்.

 

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் பிரதமரும் அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நமது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அவசர சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. 

 

2016ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று திமுகவுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது பிரதமர் மட்டும் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்