Skip to main content

ஊர்க்காவல் படையினரை பணி நிலைப்பு செய்ய அன்புமணி வலியுறுத்தல்

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

ஊர்க்காவல் படையினரை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஊர்க்காவல் படையினரின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு நியாயமான  ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கூட அரசு செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.
 

இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு சீனப் போருக்கு பிறகு காவல்துறைக்கு உதவியாக பணியாற்றுவதற்காக ஊர்க்காவல்படை மறுசீரமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஊர்க்காவல்படை 1963-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க்காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு செய்யும் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தான் கொடுமை ஆகும். ஊர்க்காவல் படையினருக்கு இழைக்கப்படும் அநீதியை தமிழக அரசு களையவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு துணை போவதை ஏற்க முடியாது.
 

ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது. இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் கைக்கெட்டிய ஊதிய உயர்வு ஊர்க்காவல்படையினருக்கு வாய்க்கு எட்டவில்லை.

 

Workers should be given periodic payments for work force


 

ஊர்க்காவல் படையினரின் பணி என்பது ஒதுக்கித் தள்ள முடியாதது ஆகும். தமிழ்நாடு முழுவதும் 142 படை அணிகளில் 2805 பெண்கள் உட்பட மொத்தம் 15,622 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று சட்டப்பேரவையில்  கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார். ஊர்க்காவல் படையினரின் துணையின்றி தேர்தலோ, மீட்புப் பணிகளையோ மேற்கொள்வது சாத்தியமில்லை என்ற நிலையில், அவர்களை மாதம் முழுவதும் வேலை வாங்கி விட்டு ரூ.2800 மட்டும் ஊதியம் வழங்குவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இதை அரசாங்கமே செய்வதை அனுமதிக்க முடியாது.
 

கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை. காவல்துறையினருக்கு இணையாக அனைத்து பணிகளையும் செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு, காவல்துறைக்கு இணையாக ஊதியம் தராவிட்டாலும் ஓரளவு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். 
 

ஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க்காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை இம்மாதம் 26&ஆம் தேதி நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.