Skip to main content

திருச்சியில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கருத்துக் கேட்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
AIADMK manifesto preparation team in Trichy asks for feedback

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்கும் குழுவினர், பொது மக்களின் கருத்துக்கள், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் கருத்துகளையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான கூட்டமானது திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மண்டலத்திற்குட்பட்ட, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தொழில்துறை நிறுவனங்கள் சார்ந்த பிரதிநிதிகள், சிறு, குறு  தொழில் நிறுவன பிரதிநிதிகள், வைர வியாபாரிகள், தங்க நகை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம்,  அவர்களின், கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களுக்குத் தீர்வு காணும் வகையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும் கருத்துக் கேட்பு கூட்டம், திருச்சி, கருமண்டபம் பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, சி.விஜயபாஸ்கர், செ.செம்மலை, ஓ.எஸ் மணியன், ஆர்.பி உதயகுமார், வைகை செல்வன், பி.கே வைரமுத்து, முன்னாள் சபாநாயகர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், என்.ஆர் சிவபதி, கழக அமைப்புச் செயலாளர் கரூர் சின்னசாமி, மாவட்ட கழகச் செயலாளர்கள் ப..குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளும் பொதுமக்களும் தங்களது கருத்துக்களை மனுக்களாகவும், நேரிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்