தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமண நிகழ்ச்சி நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் முரளி. இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் அறக்கட்டளைகள் மூலமாகக் கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். அவருடைய மகன் தமிழக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியில் செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் முரளியின் அறக்கட்டளை சார்பாக திண்டிவனத்தில் 39 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசும்பொழுது அண்ணாமலை, அதிமுக நிர்வாகி முரளியின் செயல்பாடுகளையும் பாராட்டினார். உடனே காலில் விழுந்த முரளி அண்ணாமலையிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 'முரளி இந்த திருமண விழாவை நடத்தி இருக்கிறார். அதில் சிறு உதவியாக அணிலைப் போல நாங்களும் உதவி இருக்கிறோம்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக நிர்வாகியான முரளியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.