சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் பழனி (65), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனியாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
பழனியின் எதிர் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர், வீட்டில் ஏதாவது உணவுப்பண்டங்களை சமைத்தால் வயதானவர் என்பதால் பழனிக்கும் கொண்டுவந்து கொடுப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு எதிர்வீட்டினர், உருளைக்கிழங்கு பொரியல் செய்துள்ளனர். அதை அவர்கள் தங்களுடைய 8 வயது மகளிடம் கொடுத்து, முதியவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்துள்ளனர். எதிர்வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சிறுமியைத் தேடி அங்கு பெற்றோர் வந்தபோது, அவள் அழுதுகொண்டே பெற்றோரை கட்டியணைத்துக்கொண்டாள். அவளிடம் விசாரித்தபோது, முதியவர் பழனி அந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முதியவர் பழனியை போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர்.