Skip to main content

பணம் கேட்ட கடைக்காரரை அரிவாளால் வெட்டிய நான்கு நபர்கள்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

4 stranger misbehaved with the shopkeeper

 

திருச்சியை அடுத்த ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த காமராஜின் சித்தி மகன் சசிகுமார், புங்கனூர் அருகில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்திவருகிறார். பேக்கரி கடையில் கிராமிய நகரைச் சேர்ந்த ராஜா, அஜித், பெங்களூருவைச் சேர்ந்த குட்டிமணி, கள்ளிக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய 4 பேரும் டீ குடிக்க வந்துள்ளனர்.

 

மேலும், சிகரெட் வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தைக் கேட்டபோது கடையை அடித்து நொறுக்கி, சசிகுமாரை அரிவாளால் வெட்டி, அவரது செல்ஃபோனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வழக்கறிஞர் காமராஜ், வாலிபர்களை எச்சரித்து அவர்களிடம் இருந்த செல்ஃபோனை திரும்ப வாங்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து சோமரசம்பெட்டை காவல் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

 

இந்நிலையில், வழக்கறிஞரின் வீட்டுக்குச் சென்ற அந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் கதவைத் தட்டி வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். வழக்கறிஞர் காமராஜ் கதவைத் திறக்க மறுக்கவே வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராம்ஜிநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தப்பிச் சென்ற நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.