தமிழக கேரள எல்லையான மூணார் சுற்றுலா பகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் ஒற்றைக் காட்டுயானை உலாவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடர்ந்த வனப்பகுதியில் இருந்து காட்டுயானை உணவிற்காக ஊருக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மூணார் சொக்கநாடு பகுதியில் இரவு நேரத்தில் காட்டுயானை ஒன்று வீட்டின் வாசலில் நின்று கொண்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, புண்ணியவேலன் என்பவர் வைத்திருந்த கடையின் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது முதன்முறை அல்ல. காட்டுயானையானது இதுபோன்று 17 முறை தனது கடையை உடைத்துள்ளதாக புண்ணியவேலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களையும் யானை சேதப்படுத்துவதால் வனத்துறையினர் காட்டுயானையைப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் மூணார் சுற்றுவட்டார கிராம மக்கள்.