
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சாரங்கள் அனல் பறந்துகொண்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், அவர்கள் ஆட்சியில் செய்ததைக் குறித்தும், அடுத்து ஆட்சிக்கு வந்தால் செய்யவிருப்பதை குறித்தும் பேசி வாக்குகளை சேகரித்துவருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம், கோவை தெற்கு தொகுதியை அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு ஒதுக்கியது அதிமுக. அதனைத் தொடர்ந்து அத்தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசனை அறிவித்தது பாஜக. வானதி சீனிவாசன் தற்போது அவரது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
நேற்று கோவை ராம்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “மத்திய, மாநில அரசு கொண்டுவரும் நலத்திட்டங்களை எதிர்ப்பதே திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிமுகவில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், அப்போது வெற்றிகரமாக டெல்லி தலைமையகத்திற்கு இங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் பற்றியெல்லாம் புரியவைத்து; எப்படி இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதை டெல்லி புரிந்துகொள்வதற்கும் நாங்கள் எல்லாம் உதவியாக இருந்தோம்” என்று பேசினார்.