Skip to main content

ஊழல் இல்லை என்று மோடி தம்பட்டம் அடித்தாலும் ஊழல் தான்: -பிரகாஷ்காரத்

Published on 18/02/2018 | Edited on 18/02/2018


சி.பி.எம்.மின் 22 வது மாநில மாநாடு நேற்று தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம்.மின் கமலாலய மண்டபத்தில் தொடங்கியது. மாநிலக்குழு உறுப்பினரான மீனாட்சிகந்த்ரம் செங்கொடி ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர், மற்றும் செங்கொடித் தொண்டர்களின் அணி வகுப்பு. முதல் நாள் மாநாட்டின் போதே அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வந்து விட்டார். இரண்டாவது நாளான இன்று சி.பி.எம்.மின் அகில இந்திய பொ.செ.வான சீத்தாராம் யெச்சூரி வருகிறார்.
 

மாநாட்டின் துவக்கம் உரையாகப் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பிரகாஷ்கராத், 


மார்க்சிஸ்ட் கட்சியின் அகில உலக மாநாடு வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. அதன் முன்னோட்டமான மாநாடு இது. இடதுசாரிகள் எதிர்காலத்தில் நம்பிக்கையை அளிக்கிற சக்தியாக விளங்கப் போகிறது. நவீன தாராளமயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஏகாதிபத்திய நாடுகள், நட்பு பாராட்டுகிற நாடுகள் கூட அமெரிக்காவை எதிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை முற்போக்கு சக்தி, புரட்சிகர சக்திகள் பயன்படுத்திக் கொண்டு ஆக்கம் பெற வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக மோடி அரசு மத வெறி ஏதேச்சதிகார அரசாகச் செயல்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கான அரசாக மோடி அரசு செயல்படவில்லை பெரும் முதலாளிகளுக்கான கார்ப்பரேட்களுக்கான அரசாகச் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிற  மோடி அரசு கார்ப்பரேட்களுக்கான கொள்கையைக் கூச்சப்படாமல் கடைப்பிடிக்கிறது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக வாக்குறுதி கொடுத்த மோடி அரசு எதனையும் செய்யாமல் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

 

Prakash Karat


 

பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற மோடி அங்குள்ள அரசுடன் 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டவர். போர் விமானங்கள் காண்ட்ராக்ட் பற்றிக் கேட்டால், அது அரசு ரகசியம் என்று சொல்கிறார். இந்த விமானங்களின் உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் அம்பானியின் கம்பெனிக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, அதனை நசுக்கிய மோடி, தனி நபரின் நிறுவனத்திற்கு ஏன் வழங்கினார் அந்த நிறுவனத்திற்கு ராணுவத் தளவாடம் உற்பத்தி செய்யவே தகுதி கிடையாது. இதன் மூலம் மோடி  ஆட்சியின் மிகப் பெரிய ஊழல் வெளிவந்ததுள்ளது.
 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கியில் 11480 கோடி மோசடி செய்த நீரவ்மோடி அவரது மனைவி மகன் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியே வெளியேறிவிட்டனர். சி.பி.ஐ. விசாராணை வரும் என்ற திட்டத்தில் அவரை நாட்டைவிட்டே வெளியேற மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. மோசடி நீரவ்மோடி, சுவிட்சர்லாந்து உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மோடியுடன் ஓரே போட்டோவில் நிற்கிறார். ஊழல் இல்லை என்று மோடி தம்பட்டம் அடித்தாலும் ஊழல் தான். தமிழகத்தில் திராவிடக் கட்சி ஒன்று சீரழிந்துவிட்டது. இன்னொன்று தேக்கத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநாடு ஒரு திருப்பு முனையை உருவாக்கும் என்று பேசினார்.
 

செய்தி: படம்: ப.இராம்குமார்
 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.பி.எம்.மில் தகுதியான தலித் ஒருவர்கூட இல்லையா?

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
CPM

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடம் செல்வாக்குப் பெற்றவராக யெச்சூரியும், நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக பிரகாஷ் காரத்தும் இருக்கிறார்கள்.

 

பொதுச்செயலாளர் என்ற வகையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் யெச்சூரி இருக்கிறார்.

 

ஆனால், பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியோ, தேர்தல் உடன்பாடோ கூடாது என்ற பிரகாஷ் காரத்தின் வறட்டுவாத அறிக்கையில் திருத்தம் செய்ய பெரும்பான்மை பிரதிநிதிகள் ஆதரவளித்தது முக்கியமான திருப்பமாகும்.

 

Karat

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் பாப்புலரான கட்சியாக உருவெடுக்க கிடைத்த வாய்ப்பை, தனது வறட்டுவாத நிலைப்பாடால் சீர்குலைத்தவர் பிரகாஷ் காரத் என்ற குற்றச்சாட்டு இப்போதுவரை நீடிக்கிறது.

 

அதுபோல, உப்புக்கல்லுக்கு பிரயோசனம் இல்லாத விஷயத்துக்காக காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ்பெற்று அதன்காரணமாக மேற்கு வங்க ஆட்சியை இழக்கவும் பிரகாஷ் காரத்தே காரணமாக இருந்தார்.

 

இவ்வளவுக்குப் பிறகும், பாஜகவின் அட்டூழியம் நாடுமுழுக்க அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸுடன் கூட்டணியோ, உடன்பாடோ கூடாது என்ற அரசியல் தீர்மானத்தை முன்வைத்தார் பிரகாஷ் காரத். அதுமட்டுமின்றி, யெச்சூரி்க்கு மாநிலங்களவையில் மூன்றாவது வாய்ப்பு கொடுக்க விரும்பிய மேற்குவங்க மாநிலக் குழுவின் தீர்மானத்தையும் எதிர்த்தார்.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸை முற்றாக விலக்கிவிட்டு மதவெறி அபாயத்தை தடுக்கமுடியாது என்று யெச்சூரி ஒரு அறிக்கையை முன்வைத்தார். இந்த இரு அறிக்கைகளும் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் விவாதத்துக்கு விடப்பட்டது.

 

இந்த முக்கியமான விஷயத்தில் அகில இந்திய மாநாடு என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அறிக்கை மீது ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று பல்வேறு மாநிலக் குழுக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், அதை யெச்சூரி ஏற்கவில்லை. அது கட்சியின் வெளிப்படைத் தன்மையை சீரழிக்கும் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்தே, பிரகாஷ் காரத்தின் அறிக்கையில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி இல்லை என்ற வாசகம் ஏற்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ளலாம் என்ற யெச்சூரியின் வாசகம் இணைக்கப்பட்டது. இது சிபிஎம் வரலாற்றில் முக்கியமான முடிவாக கருதப்படுகிறது. பாஜகவையும் காங்கிரஸையும் சமதூரத்தில் வைப்போம் என்ற சிபிஎம்மின் நிலைப்பாடு இதன்மூலம் மாறுகிறது. அதாவது, தேவைப்பட்டால், மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரஸுடன்கூட சிபிஎம் உடன்பாடு வைக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.

 

என்றாலும், இப்போதும் கட்சியில் பெரும்பான்மை நிர்வாகிகள் பிரகாஷ் காரத்தின் ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். இது யெச்சூரியை சுதந்திரமாக செயல்பட விடுமா என்று தொண்டர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால், காலில் கட்டப்பட்ட இரும்புக்குண்டை தூக்கி எறிந்துவிட்டு செயல்பட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

பிரகாஷ்காரத் மற்றும் பிருந்தா காரத்தின் ஆதிக்கம் இந்த மாநாட்டில் எப்படியெல்லாம் எதிரொலித்தது என்பதை கேள்விப்படும்போது வேதனையாக இருக்கிறது. எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புகிறார்கள் மூத்த தோழர்கள்.

 

பிரகாஷ் காரத்திற்கு கேரளா மற்றும் ஆந்திரா மாநிலக்கிளைகள் ஆதரவாக இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்டோர் பிரகாஷ் காரத்தை ஆதரித்திருக்கிறார்கள். யெச்சூரியை மாற்றிவிட்டு, ஆந்திரா மாநிலச் செயலாளர் ராகவலுவை பொதுச்செயலாளராக கொண்டுவர வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் முன்மொழிந்திருக்கிறார்.

 

அப்போது பிரதிநிதிகள் மத்தியில் பெரும் குழப்பமும், யெச்சூரிக்கு ஆதரவான முழக்கமும் அதிகரித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

 

CPM

 

அரசியல் தலைமைக் குழுவிலிருந்து சுபாஷினி அலியை நீக்கிவிட்டு, உ.வாசுகியை கொண்டுவர பிருந்தா காரத் முயற்சி செய்திருக்கிறார். அதற்கும் கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. எனவே அதுவும் கைவிடப்பட்டிருக்கிறது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி, விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்த அசோக் தவாலேவை அரசியல் தலைமைக் குழுவிற்கு கொண்டுவர யெச்சூரியும் மத்தியக்குழுவில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் முயற்சித்தனர். அந்த முயற்சியையும் பிரகாஷ் காரத் முறியடித்திருக்கிறார்.

 

CPM

 

மத்தியக்குழுவில் புதிதாக இணைக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் யெச்சூரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. கட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்த மாநாட்டில்தான், மத்தியக்குழுவிற்கு 20 சதவீதம் புதிய ஆட்களை தேர்வு செய்துள்ளனர். மத்தியக்குழு உறுப்பினர்களின் சராசரி வயதும் 65 முதல் 66க்கு குறைந்துள்ளது.

 

காங்கிரஸ் உறவுகுறித்த பிரகாஷ் காரத்தின் அறிக்கையில் திருத்தம் கொண்டுவருவது குறித்த விவாதத்தின்போது, கடுமையான விவாதங்கள் நடந்திருக்கின்றன. திருத்தத்தை ஏற்க மறுத்தால் கட்சி பிளவுபடும் அபாயம் வரை சென்றுள்ளது. இதையடுத்தே, திருத்தம் ஏற்கப்பட்டுள்ளது.

 

திருத்தம் ஏற்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் திமுகவுடனோ, காங்கிரஸுடனோ தேர்தல் உடன்பாடு ஏற்படுவதில் இருந்த தடங்கல் நீங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள் மூத்த தோழர்கள்.

 

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50 ஆண்டு வரலாற்றில் இதுவரை கட்சியின் அரசியல் தலைமக்குழுவில் இடம்பெறும் அளவுக்கு தலித் ஒருவரைக்கூட வளர்த்தெடுக்கவில்லையா என்ற கேள்விக்கு இந்த மாநாட்டிலும் பதில் இல்லை.

 

CPM

 

அதே சமயம், பிரகாஷ் காரத் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, புதிய உத்வேகத்துடன் தொண்டர்களின் ஆதரவோடு கட்சியை வெகுஜனக்கட்சியாக யெச்சூரி மாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.