
தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் தேவை, சாலை வசதி ஆகியவை தொடர்பாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 61 முதல் 65 வரை உள்ள வார்டு பொதுமக்களின் கோரிக்கையான பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து, சாலை வசதியைத் துரிதமாக போட உத்தரவிட வேண்டும் என்றும் அதேபோல் தொகுதி முழுவதும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் தொடர்ந்து பல்வேறு தேவைகளைத் தொகுதியில் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் மக்கள் மற்றும் நலச் சங்கங்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் குறைகளைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனுக்களாக அளித்தனர். அந்த மனுக்களைப் பட்டியலிட்டு அவற்றை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.