Skip to main content

குமரியில் மெரினா புரட்சி..? 3000 போலீசார் குவிப்பு..!

Published on 06/04/2018 | Edited on 07/04/2018

 

ex

   

 " வாடி வாசலை திறக்காமல் வீட்டு வாசலுக்குப் போக மாட்டோம்." என அலங்காநல்லூரில் ஆரம்பித்து சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் புரட்சியை நடத்தி சாதித்துக்காட்டினர் மாணவர்கள். நீட் தேர்வு, கன்னியாகுமரி மீனவர் பிரச்சனை வரிசையில் தற்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் என ஆளும் அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறாத நாட்களே தமிழகத்தில் இல்லை. இதே வேளையில், கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 7, 2018 அன்று ஒரு மாவட்டம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்துக்கு போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக முறையான காவல்துறை அனுமதியும் வாங்கியிருந்த வேளையில், அதே தினத்தில் பா.ஜ.க.வினர் ஏப்ரல் 7 அன்று குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்துவோம் என்று போட்டி  அறிவிப்பு செய்திருந்தனர்.


 
    இவ்வேளையில், கூடங்குளம் அனுமின் உலை எதிர்ப்பாளரும், பச்சைத் தமிழகத்தின் நிறுவனருமான சுப.உதயகுமாரன், "அணையப்போகும் விளக்கு அடர்த்தியாக எரியும்.!" என்ற தலைப்பினில், "  கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 7, 2018 அன்று ஒரு மாவட்டம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்துக்கு போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. முறையான காவல்துறை அனுமதியும் வாங்கியிருந்தார்கள். ஆனால், திடீரென ஏப்ரல் 5 அன்று பா.ஜ.க.வினர் ஏப்ரல் 7 அன்று குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்துவோம் என்று அறிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி வாங்காமல், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தாமல் எப்படி மாவட்டம் தழுவிய முழு அடைப்பு நடத்துவோம் என்று அறிவிக்க  முடியும்? அப்படியானால் ஏற்கனவே அனுமதி வாங்கியவர்கள் பைத்தியக்காரர்களா? யாரும் எதுவும் கேட்க முடியாது. பாசிசம் இப்படித்தான் வேலை செய்யும், செய்கிறது.

 

      சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான சுவரொட்டிகளை வாகனங்களில் வந்து பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் கிழித்தெறிந்தனர். போராட்டக்காரர்கள் மக்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த வாகன ஓட்டிகளை தனித்தனியாக சந்தித்து மிரட்டியிருக்கின்றனர். "பந்த் நடத்தப் போகிறோம், உன் வாகனம் ஓடினால் அடித்து உடைப்போம்" என்று மிரட்டியிருக்கிறார்கள்.    இரண்டாவதாக போராட்டம் அறிவித்த பாசிஸ்டுகளை தடுப்பதற்கு பதிலாக, காவல்துறை நேற்று (ஏப்ரல் 5) நள்ளிரவு சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டத்துக்கு அளித்த அனுமதியை நீக்கியிருக்கிறது. சில பாசிச ஆதரவு ஊடகங்களோ  இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட போராட்டச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் அரச விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அலைகின்றன.    நேற்று (ஏப்ரல் 5) மாலை ஒரு தோழர் என்னை தொலைபேசியில் அழைத்து ஏப்ரல் 7 அன்று பெரும்  பிரச்சினைகள் செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நீங்கள் கவனமாக இருங்கள் என்று எச்சரித்தார். இன்று (ஏப்ரல் 6) மாலை பச்சைத் தமிழகம் கட்சி சார்பாக ஆரல்வாய்மொழியில் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீங்கள் போக வேண்டாம் என்று சில அதிகாரிகள் என்னை தடுத்திருக்கின்றனர்.

 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காவி பாசிசம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. கட்சிக்காரர்கள் வீடு வீடாகச் சென்று தனிநபர்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்கள். நாகர்கோவில் நகர்மன்ற  முன்னாள்  தலைவி(தி) ஒன்று பல வீடுகளுக்குச் சென்று என்னைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டிருக்கிறது. இந்த "பாதாளச் சாக்கடை புகழ்" தலைவி(தி)யை சாலையில் போகும் மக்கள் எல்லாம் சாபமிடுவதை கேட்க காது கோடி வேண்டும். பொது வெளியில் மேடைபோட்டு அரசியல் பிரச்சினைகள் குறித்து, "வளர்ச்சித் திட்டங்கள்" பற்றி விவாதிப்பதற்கு இந்த தலைவி(தி)யும், இதன் பொன்னான எஜமானரும் அணியமாக இருக்கிறார்களா? பேசுவோமா? இவர்கள் எல்லாம் கூட்டாகவும், கூட்டம் கூட்டமாகவும்,  தனியாகவும் கர்நாடகாவில்,  பெங்களூருவில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றி, குமரி மாவட்டத்திலும், சுற்றுவட்டாரத்திலும் நடத்திக் கொண்டிருக்கும் குவாரிகள் பற்றியும் பேசுவோமா? நள்ளிரவில் கள்ளர்கள் போல நடத்தும் ரகசியப் பயணங்கள் பற்றிப் பேசுவோமா?

 

    கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டம் இவர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன் முட்டையிடும் வாத்து. குமரி மாவட்டம் அழிந்தால் என்ன, சுற்றுச்சூழல் சிதைந்தால் என்ன, யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, எங்களுக்கு வேண்டியது பொன் முட்டை என்று அலைகிறது இந்தக் கூட்டம். அறிவார்ந்த கருத்துக்கள், சிந்தனைகள் அறியாத, புரியாத இந்த தலைவி(தி)கள், அவர்களின் பொன்னான எஜமானர்கள் பொய் சொல்லி, புரளி பேசி, மிரட்டி சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். இந்த யோக்கிய சிகாமணிகள் உதயகுமார் வெளிநாட்டு கைக்கூலி, தேசத்துரோகி என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர், பேதலித்துத் திரிகின்றனர், பேட்டிக் கொடுக்கின்றனர். 

 

    மோசடி ஆட்சி நடந்துகொண்டிருப்பதால் (இன்னும்) ஆறுமாத கால அதிகாரத்தோடு தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.  இவர்களின் அரசியல் அஸ்தமனம் வெகு அருகாமையில் இருக்கிறது. அணையப்போகும் விளக்கு இப்படித்தான் அடர்த்தியாக எரியும். பாரதி சொன்னது போல, "கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்!" என தனது முக நூலில் பதிவிட்டுள்ளார். இது இப்படியிருக்க, " மீனவ மக்கள் மாணவர்களோடு ஒன்றிணைந்து குமரி கோவளக் கடற்கரையில் ஒன்றிணைந்து மெரினாப் புரட்சியினைப் போல் இங்குப் போராடப் போகின்றார்கள்" என ரெட் அலர்ட்டை ஊதிவிட்டது உளவுத்துறை.


 
   இதனால் உஷாரடைந்த காவல்துறை நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில் சாரட்கர் தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 8 ஏ.டி.எஸ்.பி.க்கள், 7 ஏ.எஸ்.பி.க்கள், 22 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 3000 போலீசாரை கன்னியாகுமரியில் குவித்து வைத்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.