![erode AIADMK wedding hall sealed](http://image.nakkheeran.in/cdn/farfuture/kK1pMv830m9-BIYJ77XHy_dg8YUFqgHzs6ROpwGJTj0/1675947805/sites/default/files/inline-images/Untitled-1_391.jpg)
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 9 ஆம் தேதி (இன்று) அனுமதி வாங்காமல் கூட்டம் நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அதிமுகவினர் ஒன்றாகத் திரண்டிருந்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அதிமுகவினரிடம் அனுமதி இன்றி இங்கு கூட்டம் நடத்தக்கூடாது. உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால், இதை ஏற்காமல் அதிமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் போலீசாரும் வந்திருந்தனர். முத்துகிருஷ்ணன், டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அதிமுகவினரை மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறினர். ஆனால், அவர்களுடனும் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிமுகவினர் மண்டபத்தை விட்டு கலைந்து சென்றனர்.
ஏற்கனவே இதே மண்டபத்தில் கடந்த 31ஆம் தேதி அதிமுகவினர் அனுமதி இன்றி கூட்டம் நடத்தினர். அப்போதும் பறக்கும் படை அதிகாரிகள் வந்து அனுமதி இன்றி கூட்டம் போடக்கூடாது என்று கூறி கலைந்து போகச் செய்தனர். தற்போது இரண்டாவது முறையாக அனுமதி இன்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மண்டபத்தில் இருந்த இரண்டு நுழைவுவாயிலையும் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது