Skip to main content

திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்! காட்டமாக பேசிய ஸ்டாலின்!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018



 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து முதலில் மத்திய மண்டலத்தின் சார்பாக ஸ்டாலின் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம். இதில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி போன்ற மாவட்டங்கள் இணைத்து நடத்தப்போவதாக பேசிக்கொண்டனர். பிறகு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பாக மட்டுமே நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
 

இதன்படி பெரம்பலூருக்கும், அரியலூருக்கும் இடையே ஒதியம் என்ற இடத்தில் பிரமாண்டமான மேடை கோட்டை முகப்பில்  போடப்பட்டு 8ஆம் தேதி மாலை 3 மணி அளவில் கண்டன கூட்டம் என்று அறிவித்தனர்.
 

இதற்காக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆலோசனைப்படி மா.செ.க்கள் ராசேந்திரன், சிவசங்கர் பரபரப்போடு செயல்பட வேப்பூர் ஒ.செ.க்கள் ராசேந்திரன், மதியழகன் போன்றவர்கள் களமிறக்கப்பட்டனர். 
 

ஒரு வாரமாகவே, பரபரப்போடு செயல்பட்டனர் திமுகவினர். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்தபோது கட்சி பணிகளில் சுணக்கமாக இருந்தார். அதில் வெற்றி பெற்ற பிறகு இப்போது பரபரப்போடு சுற்றி வருகிறார். கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர். அந்த நெருக்கம் ஸ்டாலினிடமும் உள்ளது என்பதை காட்டவும், ஸ்டாலின் தலைவரான பிறகு இப்பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் பிரமாண்ட படுத்தினார்கள்.
 

மழை ஒரு பக்கம் மிரட்ட கூட்டம் நடக்குமா? மக்கள் வருவார்களா? என்று பலரும் குழம்பிய நிலையில மதியம் 2 மணி இருந்தே தொண்டர்கள் கூட்டம் வாகனங்களில் திரண்டு வந்தனர். மாலை 5 மணியளவில் 5 ஆயிரத்திற்கும் குறையாத மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. மதியம் ஒரு மணி அளவில் பெரம்பலூர் வந்துவிட்ட ஸ்டாலின், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
 

மாலை சரியாக 5 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க ஸ்டாலின் மேடை ஏறினார். சிவசங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஆ.ராசா, நேரு ஆகியோர் மட்டுமே ஐந்து நிமிடம் பேசினர். 
 

பின்னர் மைக்கை பிடித்த ஸ்டாலின், மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னோடிகளான முன்னாள் எம்எல்ஏக்கள் திருமானூர் ராமசாமி, அரியலூர் ஆறுமுகம், ஜே.எஸ். ராசு, க.சொ.கணேசன் ஆகியோரையும், அடுத்து உடல்நிலை பாதிப்பால் ஓய்வெடுக்கும் ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன், வேப்பந்தட்டை செல்லமுத்து, மறைந்த பேச்சாளர் வெற்றிகொண்டான் ஆகியோரின் பணிகளை பாராட்டி பேசினார். 
 

இன்று மக்கள் மறக்க முடியாத நாள். ஆம். மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 120 கோடி இந்திய மக்களையும் முட்டாளாக்கிய நாள். இதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் ஊழல், கள்ளநோட்டு, கருப்பு பணம், தீவிரவாதம் எல்லாம் ஒழியும் என்றார் மோடி. ஒழிந்ததா? அயல்நாட்டில் பதுக்கியுள்ள பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் போடப்போவதாக சொன்னாரே, 15 ரூபாயாவது போட்டாரா? வங்கி கணக்கில் இல்லையே. 
 

வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்படுகிறோம். வெளிநாடு வாழ் பிரதமரை கேள்விப்பட்டதுண்டா? அவர்தான் மோடி. 84 நாடுகளுக்கு பயணம். இதற்கு 1486 கோடி ரூபாய் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது. சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் வரை பிரச்சனையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இதுதான் அவர்கள் சாதனை. 
 

ஒரு ஊரில் ஒருவன், 365 நாளில் பெரிய மலையை தூக்கி காட்டுகிறேன் என்று சொல்ல, ஊர் மக்கள் அவன் மலையை தூக்கும் அளவிற்கு தெம்பூட்டுவதற்காக, வகை வகையான உணவுகளை சமைத்து போட்டார்கள். 365வது நாள் மக்கள் மலையை தூக்கி காட்ட சொல்ல, நீங்கள் எல்லோரும் என் கையில் தூக்கி வையுங்கள் நான் அதை தாங்கி கொள்கிறேன் என்றானாம். அப்படிதான் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் ஏமாற்றத்தில் உள்ளது. 
 

அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசாக உள்ளது தமிழக அரசு. நாங்கள் செய்யும் ஊழலை கண்டு கொள்ளாதீர்கள், நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்கிறோம் என்று ஏவல் அரசாக உள்ளது. நெடுஞ்சாலை துறையில் ஊழல் என்று வழக்கு போட்டோம். சிபிஐ விசாரணை வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு போயுள்ளனர். ,
 

இப்போது சொல்கிறார் எடப்பாடி, மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்று. பயமிருப்பதால்தானே உச்சநீதிமன்றத்திற்கு போயுள்ளார். திருடர்கள் கூட பயப்படுவார்கள். எங்கே திருடும்போது மாட்டிக்கொள்வோமோ என்று. ஆனால் இவர்கள் பயமே இல்லாமல் திருடுகிறார்கள். இதற்கு மத்திய அரசும் துணை போகிறது. 
 

எனவேதான் இந்த இரண்டு அரசுகளையும் அப்புறப்படுத்த வேண்டும். அது உங்களால் மட்டுமே முடியும். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இங்கே கூடியிருக்கிறீர்கள். மோடி யாருக்கும் தனிப்பட்ட விரோதியல்ல. மத்திய பாஜக அரசுன் ஏமாற்றி வேலைக்கு முடிவு கட்டத்தான் இன்றைக்கு பல மாநில தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். 
 

நாளை (வெள்ளிக்கிழமை) சந்திரபாபு நாயுடு சென்னைக்கு என்னை சந்திக்க வருகிறார். அப்போது கூட மாநில சுயாட்சி கொள்கைகளை மத்திய அரசிடம் விட்டுத்தர கூடாது என்ற கருத்தை வலியுறுத்தப்போகிறேன் என்று தனது 50 நிமிட பேச்சில் மோடி அரசையும், எடப்பாடி அரசையும் வெளுத்து வாங்கிவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.