Skip to main content

வழக்கிலிருந்து விடுதலை... உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கு.வாஞ்சிநாதன்

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
ddd

 

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசின் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக சிறப்பு கூட்டம் 18.2.2017 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதனால் சபாநாயகர் உத்தரவின்பேரில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி கடலூர் மாவட்ட திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர், திமுக தலைமை கழக பேச்சாளருமான கு.வாஞ்சிநாதன் தலைமையில், 18.2.2017 அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி அருகே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டிலிருந்து திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த கு.வாஞ்சிநாதனை வழிமறித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

 

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாகவும், பொதுமக்களை அசிங்கமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தமிழ்நாடு அரசு பொது சொத்துக்கள் சேதம், தடுப்பு சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் கு.வாஞ்சிநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

 

கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண், 2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கு.வாஞசிநாதன் பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 25 நாட்கள் சிறைச்சாலையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளி வந்தார். இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 5.10.2020 அன்று நடந்தது.

 

இவ்வழக்கு தொடர்பாக கு.வாஞ்சிநாதன் ஆஜரானார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மீண்டும் 8.10.2020 அன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அன்று ஆஜரான பின் 9.10.2020 குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வழக்கு 12.10.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தீர்ப்பில் இருந்து கு.வாஞ்சிநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

 

அதனையொட்டி சென்னையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கு.வாஞ்சிநாதன்தான் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்