Skip to main content

"உயிர் தியாகம் செய்யாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள்’’-வைகோ

Published on 12/04/2018 | Edited on 13/04/2018
vaiko1

 

தமிழகத்துக்கு துரோகம் இழைத்த  பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து 
ஈரோடு மாநகரில் இளைஞன் தர்மராஜ்தீக்குளித்து உயிர் நீத்த உன்னதத் தியாகம் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தனது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டின் உயிர் வாழ்வாதாரமான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் இழைத்த பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, ஈரோடு மாநகரில் தாய் தந்தை அற்றவரும், திருமணம் ஆகாதவருமான எந்த அரசியல் கட்சியையும் சாராத தர்மராஜ் என்ற இளைஞர் இன்று தீக்குளித்து உடல் எங்கும் கருகி, சிறிது நேரத்திலேயே உயிர் நீத்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது.

 

வாழ்க்கையின் வசந்தத்தைக் காண வேண்டிய வாலிப வயதில் தமிழகத்தை வாழ வைக்க தன்னையே நெருப்புத் தணலுக்குப் பலியிட்டு, உயிரை அர்ப்பணித்துக் கொண்டதை அறிந்து என் உள்ளம் வேதனையால் உடைந்தது.

 

 சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இந்த இளைஞன் பாட்டிகள் இருவரோடு வசித்து வந்தார். கோவில்களிலும், திருவிழாக்களிலும் சிறு சிறு பொம்மைகள் விற்கின்ற வணிகம் செய்து, வசதியற்ற வாழ்வுதான் நடத்தி வந்துள்ளார். காவிரி தீரத்தில் அவருக்கு நஞ்சை ஒன்றும் இல்லை. ஆனால், தன் உயிரைவிட தமிழக விவசாயிகளின் வாழ்வு, தமிழ்நாட்டின் எதிர்காலம் மேலானது என்று கருதியுள்ளார்.

 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது, தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உயிர்த் தியாகமும் செய்வார்கள் என்பதை உணர்த்துவதற்காக பற்றி எரியும் நெருப்புக்கு தன் உடலையும், உயிரையும் தந்துள்ளார்.

 

தமிழர்களைத் தலைநிமிர வைத்த பகுத்தறிவுப் பேரொளி அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் காவிரிக்காக தன்னை களபலி ஆக்கிக் கொண்டார் தர்மராஜ். இத்தகைய வீரமும், தியாக உணர்வும் கொண்ட இலட்சோப இலட்சம் இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர். இப்படி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்கின்ற செயலில் ஈடுபடாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள் என தமிழக இளைஞர்களை தந்தையாக, மூத்த அண்ணனாக இருகரம் கூப்பி மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.

 

தியாகச் சுடர் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் நடந்தபோதே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி  அந்த ஏழ்மையான குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் மூன்று இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

  வீரத் தியாகி தர்மராஜின் துயர மரணத்தால் கண்ணீரில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

ஒரு கொள்கைவாதியின் தவறான முடிவு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamoorthy passed away

திராவிட இயக்கத்தின் கொள்கை பற்றாளராகத் தமிழ் மொழி, இனத்தின் மீது அளவு கடந்த விசுவாசியாக, அரசியல் என்கின்ற பொது வாழ்வில் நேர்மையான மனிதராகப் பெருவாழ்வு வாழ்ந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் வாழ்க்கை 28 ஆம் தேதி அதிகாலை முடிவுக்கு வந்தது.

ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி பள்ளி படிக்கின்ற வயதிலேயே அன்றைய சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெனாண்டர்ஸ் போன்ற தலைவர்கள் ஈரோட்டில் கூட்டம் நடத்தி அரசியல் வகுப்பு எடுத்தபோது அதில் கலந்து கொண்டவர். அடுத்து கல்லூரியில் படித்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் அப்போதே பொறுப்பேற்றார்.

கல்லூரி காலகட்டத்தில் தான் வைகோ அவர்களோடு இணைந்தார். இளமைப் பருவத்திலேயே திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து வந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. அப்போது வைகோவுடன் வந்த 9 மாவட்டச் செயலாளர்களில் இறுதி வரை வைகோவுடன் இருந்தவர் கணேசமூர்த்தி தான். ஒருமுறை எம்எல்ஏ, மூன்று முறை எம்.பி. என அரசியல் அதிகாரம் இவருடன் இருந்து வந்தது. மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். விவசாய விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு, உயர் மின் கோபுரம் மற்றும் ஐடிபிஎல் என எல்லா போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து செயல்பட்டவர்.

அதேபோல் தமிழீழ விடுதலைக்குத் துணையாக நின்று பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளை  ஆதரித்துப் பேசியதற்காக அன்றைய ஜெயலலிதா ஆட்சியில்  வைகோவுடன் கணேசமூர்த்தியையும்  பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமைதி, அன்பு, பொறுமை தனது அரசியல் வாழ்வில் எவ்வித அடாவடித்தனமும் செய்யாதது, அதேபோல் கொள்கையில் ஒரு சமரசமற்ற போராளியாய் வாழ்ந்தது என்பது அவருக்கு பெருமை தான்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி காலை ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் உயிர்க்கொல்லி மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் தேதி இறந்துவிட்டார். கணேசமூர்த்தியின் இறப்பு மதிமுக பொதுச் செயலாளரான வைகோ உட்படத் தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கும் மிகுந்த துயரத்தைக் கொடுத்திருக்கிறது.

அன்பு சகோதரரை இழந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்கப் பேசிய வைகோ,  எம்.பி சீட் வழங்காததால்தான் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. திமுகவிடம் இரண்டு சீட் கேளுங்கள் கிடைத்தால் நான் நிற்பதை பற்றி யோசிக்கலாம். இல்லை என்றால் துரை மட்டும் நிற்கட்டும் என்று கூறினார். கல்லூரிக் காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை இழந்துவிட்டேன் என்று நா தழுதழுக்க பேசினார்.