Skip to main content

ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பதவியா? ர.ர.க்கள் அதிர்ச்சி!!!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
eps

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தை கட்சி நிர்வாக ரீதியாக வடக்கு, தெற்கு என பிரித்து வைத்து நிர்வாகிகளை நியமித்து கட்சி பணி பணிகளை செய்து வருகிறது அதிமுக. வடக்கு மாவட்ட செயலாளராக மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தனர்.

 

தெற்கு மாவட்டம் செயலாளராக வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன் நியமிப்பதற்கு கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஆரணி தொகுதியை தெற்கு மாவட்டத்தோடும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை வடக்கு மாவட்டத்தோடு இணைத்து இது நிர்வாக ரீதியாக சரியாக இருக்கும் என காரணம் கூறி விவகாரத்தை முடித்து வைத்தனர். கடந்த இரண்டு வருடமாக இவர்கள் இதே நிலையில் பணியாற்றி வந்தனர். 

 

இந்நிலையில் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றமும், மாவட்டங்கள் பிரிப்பும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக பால் கூட்டுறவு சங்க மாவட்ட சேர்மன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வடக்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகளும், தெற்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகள் தருவதுபோல் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர் ஆகிய 4 தொகுதிகளும் வடக்கு மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி, ஆரணி, கலசப்பாக்கம் என நான்கு தொகுதிகளை பிரித்து வைத்துள்ளனர். இதில், தெற்கு மாவட்டத்தில் கலசபாக்கம் தொகுதி வந்திருக்கவேண்டும் ஆனால் அதற்கு பதில் போளூரை இதோடு இணைத்து வைத்துள்ளனர்.

 

இதுபற்றி அதிமுக பிரமுகர் ஒருவர் நம்மிடம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் திமுகவும், மூன்று தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. செய்யார் மோகன், ஆரணி சேவூர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றனர். இதில், கலசபாக்கம் தொகுதி என்பது தற்போது மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ச்சியாக நின்று வெற்றி பெறும் தொகுதி. அந்த தொகுதியில் அவருடைய சமூகத்தினர், உறவினர்கள் என அதிகமாக உள்ளனர். அவர் அந்த தொகுதியில் அதுமட்டுமல்லாமல், கலசபாக்கம் ஒன்றிய சேர்மனாகவும் இருந்துள்ளார். கலசப்பாக்கத்தில்தான் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகம். ஆனால் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, அமைச்சரின் லஞ்ச டார்ச்சரால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அமைச்சர் பதவியை இழந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். அப்படிப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் தேர்தலில் சீட் வழங்கக்கூடாது என கலசப்பாக்கம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக, பன்னீர்செல்வத்திற்கு சீட் வழங்கினார், அவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். அவர் எம்.எல்.ஏ. ஆனது அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இரு தரப்பும் கலசபாக்கம் தொகுதிக்குள் எதிரும் புதிருமாகவே மோதிக்கொண்டுள்ளன. 

 

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு முதல்வரான எடப்பாடி பழனிசாமி மூலம் மீண்டும் வந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கொங்கு அமைச்சர்களின் நட்பினால் அக்ரிக்கு முக்கியத்துவம் கிடைத்தன. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் கட்சியில் வாய்ப்பு வழங்கினால், நான் அதிரடியாக வேறு முடிவுகளை எடுப்பேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலசபாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ள பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டினார். பின்னர் சில பல பேச்சுவார்த்தைகளும் சில சமாதான படங்களும் நடந்து, கவனிப்புகள் செய்தபின்பு பன்னீர்செல்வம் தன்னுடைய எதிர்ப்பின் அளவை குறைத்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் கட்சிக்குள் தன்னுடைய அதிகாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக படிப்படியாக தன்னுடைய நண்பர்களான, அமைச்சர்களாக உள்ளவர்களையும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போன்றோருடனும் லாபி செய்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே திருவண்ணாமலை வேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் என்று ஒன்றை உருவாக்கி அதன் சேர்மன் பதவியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்கார வைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவதை அறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது மேல்மட்ட லாபி மூலம் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என காய் நகர்த்தினார். அவர் எதிர்பார்த்தபடியே தெற்கு மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் மீண்டும் சில சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தெற்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய கலசபாக்கத்தை வடக்கு மாவட்டத்திற்கும், வடக்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய போளுரை தெற்கு மாவட்டத்திலும் இணைத்து பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்துவிட்டு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 

இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என ஓரம் கட்டி வைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் பதவியை வழங்கி இருப்பது எங்களை போன்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என புலம்புகின்றனர் நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.