Skip to main content

அதிமுக, பாஜக கூட்டணிக்குள் குழப்பம்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தேனி தொகுத்தியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதிலும் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமைக்கு அதிமுக மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லபடுகிறது. அதிமுக இடைத்தேர்தலில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தியது என்ற குற்றச்சாட்டும் பாஜக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது என்று கூறியது அதிமுக கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக  உறுப்பினர் சேர்க்கை  கூட்டம் நேற்று நடைபெற்றது. 

 

bjp



இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை, கெயில் ஹைஹட்ரோ கார்பன் திட்டங்களை அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. அதே போல் காங்கிரஸ் கட்சி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த போது தமிழகத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்தது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வின் அவசியத்தை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் இங்கு இருக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நீட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என்று கூறினார். மேலும் வசதி படைத்தவர்கள் மட்டுமே மும்மொழி கொள்கையை பயன்படுத்தி அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஏழை மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை எடுத்து செல்வதற்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


ஏழை குழந்தைகள் மும்மொழி கற்பதை இங்குள்ள அரசியல் கட்சியினர் விரும்புவதில்லை என்றும் கூறினார். அப்படி என்றால் அதிமுகவையும் குறை கூறுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணியில் இல்லை என்றால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்போம் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணியை வேலூர் தேர்தலில் ஆதரிக்கிறோம் என்றும் கூறினார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக கட்சியினர் எதிர்க்கின்றனர் என்றும் கூறினார். தமிழிசை இப்படி கூறியிருப்பது அதிமுக, பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்