டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலியின் மக்கள் சானா கங்குலியின் பதிவு வைரலானது. அவரின் இந்த பதிவிற்கு விளக்கம் கூறி கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

சானா கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்துவன் இல்லை என்பதால் தங்களை பாதுகாப்பாக உணரும் நபர்களே, நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் குறி நாளை உங்கள் மீதும் பாயும். உங்களையும் அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். இறைச்சி சாப்பிடாதீர்கள், மது அருந்தக் கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது.அவர்கள் சொல்லும் பற்பசையை பயன்படுத்தவேண்டும். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்படும் முத்தத்திற்கு பதிலாகவும், கைகுலுக்குவதற்கு பதிலாகவும் `ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்ல நேரிடும். யாருமே இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடனே வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் இதனை உணர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த கருத்து பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றது.
இந்த நிலையில், சானாவின் இந்த கருத்து குறித்து கங்குலி ட்வீட் செய்துள்ளார். அவரின் அந்த ட்வீட்டில், "இந்த பிரச்னைகளில் இருந்து சானாவை விட்டுவிடுங்கள். பதிவு உண்மையில்லை. அவள் இளம்பெண். அவளுக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.