Skip to main content

திட்டமிட்டு இரு குழந்தைகள் கொலை? குழம்பும் போலீஸ்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A saloonkeeper who incident two children in uttarpradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம், புடான் பகுதி அருகே உள்ள பாபா காலணியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி ஆயுஷ் (12), யுவராஜ் (10) மற்றும் அஹான்(8) என்ற 3 மகன்கள் இருந்தனர். வினோத் வசித்த வீட்டின் எதி்ரே, சஜித் என்பவர் முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். வினோத்தும், சஜித்தும், எதிர் எதிரே இருப்பதால், இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சஜித் தனது சகோதரர் ஜாவத்தை அழைத்துக் கொண்டு நேற்று (19-03-24) இரவு, வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சஜித், தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் செலவுக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று வினோத் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, வினோத்தின் மனைவி பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள்ளே சென்ற போது, தனக்கு உடம்பு சரியில்லை, அதனால் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடந்து வருகிறேன் என்று கூறி சஜித் மாடிக்கு சென்றுள்ளார். மேலும், சஜித் தன்னுடன் வினோத்தின் மூன்று மகன்களையும் அழைத்து மாடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பணத்தை எடுத்து வினோத்தின் மனைவி மாடிக்கு சென்ற போது, சஜித் மற்றும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் தனது 3 மகன்களை கத்தியால் குத்திவிட்டு நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு வினோத்தின் மனைவி, இதனைக் கண்டதும் சஜித்தும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே, அங்கு வினோத்தின் மகன்கள் கத்தியால் குத்துப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதில், ஆயுஷ் மற்றும் அஹான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, யுவராஜ் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத்துக்கும் சஜித்துக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை என்றும், சம்பவம் நடந்த அன்று வினோத் வீட்டில் இல்லாத நேரத்தை அறிந்து சஜித்தும் ஜாவத்தும் இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, இரண்டு கொலைகளைச் செய்த கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சஜித் போலீசாரிடம் பிடிபட்டார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக போலீசாரை தாக்கி சஜித் தப்பிக்க முயன்றுள்ளார். தப்பிக்க முயன்ற சஜித்தை போலீசார் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். மேலும், சஜித்தின் சகோதரர் ஜாவத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.