
தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை கரோனா, இதுவரை 23 நாடுகளுக்குப் பரவியுள்ளது. மேலும், இந்தக் கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதைத் தடை செய்துள்ளனர். இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் மேலும் பல நாடுகளுக்குப் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சோர்வு ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இளம் வயதினரும் இந்த தீவிர சோர்வு ஏற்படுவதாகவும் அந்தநாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் ஒமிக்ரான் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமிக்ரான் கரோனா தொற்று இரண்டு பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 65 வயது மற்றும் 45 வயதான ஆண்களுக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட அந்த இருவர் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது.