Skip to main content

கரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு!!! புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்வு!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
The number of Corona in Puducherry increased to 163

 

புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 05-ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து புதுச்சேரியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா உறுதியானது. அதன் பிறகு 08-ஆம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவமனை சிகிச்சையிலிருந்த, விழுப்புரத்தை சேர்ந்த முதியவர் இறந்த நிலையில் அவருக்கும் கரோனா உறுதியாகியிருந்தது. அதேபோல் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 82 வயது முதியவர் பல்வேறு நோய் காரணமாக அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனால் கரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தார். கரோனாவுக்கு பலியான முதல் புதுச்சேரிவாசி இவரே.


இந்நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த 82 வயது முதியவர் உடல்நலக்குறைவால் கதிர்காமம் அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 163 ஆக உள்ள நிலையில் 76 பேர் குணமடைந்துள்ளனர். 79 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 38  பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 39 பேரும், வெளி நோயாளிகளாக 2 பேரும் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 9,250 பேரின் இரத்தம், சளி மற்றும் உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 163 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 8979 பேருக்கு கரோனா இல்லை, 103 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.    

 

 


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஏற்கனவே  அரசு  மருத்துவமனையில் 40 பேர், ஜிப்மரில் 42 பேர், பிற மாநிலத்தில் 2 பேர் என புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் புதிதாக இன்று 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஜிப்மரில் ஒருவர்,  காரைக்காலில் ஒருவர் சிகிச்சை பெறுகின்றனர். இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 79  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே நோய் தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்காலில் 14 வயது சிறுமிக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தினர் சென்னையிலிருந்து வந்தவர்கள்” என கூறினார்.

அதேசமயம் “பொதுமக்கள் கட்டுப்பாடுகளை விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டும். அதன்மூலம்தான் கரோனா  தாக்குதலில் இருந்து மக்கள் தப்ப முடியும்" என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்