Skip to main content

ஒரு தேசம்; அனைத்தும் அவமானம் -  ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மம்தா!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

mamta banerjee

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி, சமீபத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அம்மாநில - மாவட்ட அதிகாரிகளோடு கரோனா நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதன்தொடர்ச்சியாக, பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

 

இந்தநிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லையென குற்றஞ்சாட்டிய மம்தா, இது ஒரு வழி தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி அவமானம். ஒரு தேசம். அனைத்தும் அவமானம் என கூறியுள்ளார். 

 

முதல்வர்கள் சொல்வதைக் கேட்க விரும்பாத அளவுக்கு பிரதமர் தன்னம்பிக்கையற்றவரா? அவர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? முதல்வர்கள் பேசுவதை கேக்க விரும்பவில்லையென்றால் ஏன் எங்களை அழைக்க வேண்டும். அவர் சில மாவட்ட மாஜிஸ்ட்ரெட்களை பேச அனுமதித்து, முதலமைச்சர்களை அவமதித்துவிட்டார் என தெரிவித்துள்ள மம்தா, தான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஆனால் பிரதமர் படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவைகளின் இருப்பு குறித்தோ, கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை நிலை குறித்தோ எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பிரதமர் திமிர் பிடித்தவராக இருப்பதாக கூறிய மம்தா, "பல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் (மத்திய அரசு) என்ன நினைக்கிறார்கள்?. நாங்கள் என அடிமை தொழிலாளர்களா இல்லை பொம்மைகளா?அவர்கள் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அனைத்து முதல்வர்களுக்காகவும் பேசவில்லை. ஆனால் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறுவதை போன்று சர்வாதிகாரம் நிலவுகிறது" என கூறியுள்ளார். 

 

மேலும் அவர், "எங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் நடந்தபோது, அவர்கள் மத்திய குழுக்களை அனுப்பினர். உத்தரபிரதேசத்திற்கு எத்தனை மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன? உத்தரபிரதேச மாநிலத்தில் உடல்கள் நீரில் மிதக்கின்றன. நாம் நதியை சார்ந்த நாடு. அவர்கள் கங்கையை மாசுத்தப்படுத்தியதை மறைக்க, உத்தரபிரதேசத்தில் எதுவும் நடக்கவில்லை என கூறுகின்றனர். அவர்கள் கங்கை தாயை சிதைக்கிறார்கள். இயற்கை அவர்களை மன்னிக்காது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.