Skip to main content

காங்கிரஸ் பிரமுகர் கொலையின் முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (42). காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார். சாசன் மருந்து கம்பெனி உள்ளிட்ட  தனியார் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்கள் எடுத்து செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி காலாப்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு  புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 

murder

 

 

 

இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் காண்ட்ராக்ட்  செய்வதில் ஏற்பட்ட தொழில்போட்டி காரணமாக கூலிப்படை வைத்து ஜோசப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், செல்வ குமார், பார்த்திபன் உள்பட 6 பேர்  கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிள்ளைச்சாவடி சங்கர் கணேஷ், கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாண்டில்யன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் சங்கர்கணேசை ஏற்கனவே காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக சாண்டில்யனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். 

 


விசாரணையில் "சிறு வயதில் இருந்தே சங்கர்கணேஷ் எனக்கு நண்பர். அதேபோல் தாதா மணிகண்டனும் நெருங்கிய நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்த போது  எங்களுக்கு எதிராக இருக்கும் தொழில் அதிபர் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்வது என்று அப்போது முடிவு செய்தோம். இந்த சம்பவத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை செய்வதாக சங்கர் கணேஷ் உறுதி அளித்தார். அதற்கு கைமாறாக காங்கிரஸ் பிரமுகரான காலாப்பட்டு ஜோசப்பை கொலை செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்.

 

 

 

இதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். ரிலையன்ஸ் பாபு, காலாப்பட்டு ஜோசப் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து கொலை செய்வது என்று திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்ய ஒரு அணியும், ஜோசப்பை கொலை செய்ய மற்றொரு அணியும் தயார் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி முதலில் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்தோம். அந்த கொலைக்கு சங்கர் கணேஷ் தன்னுடைய காரை கொடுத்து உதவி செய்தார். மேலும் பணம் மற்றும் ஆட்கள் உதவியும் செய்தார். அந்த கொலையை முடித்ததும் அடுத்து ஜோசப்பை கொலை செய்வதற்கு தயாரானோம்.

 

இதற்காக சுமார் ஒரு வார காலமாக ஜோசப்பின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தோம். அவரை கொலை செய்ய கடலூர், அரியாங்குப்பம், தட்டாஞ்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 4 கூலிப்படைகளை ஏற்பாடு செய்தோம். இந்தநிலையில் ரிலையன்ஸ் பாபு கொலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி எங்களை கைது செய்வதற்கு நெருங்கினர். போலீசார் எங்களை கைது செய்தால் சிக்கல் ஆகிவிடும் என்பதால் ஜோசப்பை கொலை செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்தினோம். அவரை எப்படியாவது கொலை செய்துவிடுவது என்பதற்காக அவருடைய வீடு அருகில் இருந்து அடிக்கடி அவர் செல்லும் இடங்களில் எங்கள் ஆட்கள் கண்காணித்தனர்.

இறுதியாக கடந்த 30-ந் தேதி ஜோசப்பை கொலை செய்வது என முடிவு செய்து அதற்கு தயாரானோம். காரில் வந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளில் வந்தாலும் சரி எப்படியாவது அவரை கொலை செய்வது என்று முடிவு செய்திருந்தோம். அன்றை தினம் மதியம் அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். எங்கள் ஆட்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்தது. உடனே நாங்கள் தயாரனோம். புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே ஜோசப் வந்தபோது அவரை கொலை செய்ய முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.

 

அதைத்தொடர்ந்து அவரை நானும் (சாண்டில்யன்), மைக்கேல் ஏழுமலை என்பவரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றோம். பெரியமுதலியார் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் அவர் மீது மோதுவது போல் மைக்கேல் ஏழுமலை நெருக்கமாக ஓட்டிச்சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்னால் உட்கார்ந்திருந்த நான் வீச்சாரிவாளை எடுத்து ஜோசப்பை வெட்டினேன். ஒரே வெட்டில் ஜோசப் கீழே விழுந்தார். அதன்பிறகு நாங்கள் தப்பிச்சென்றுவிட்டோம்.

 

 

 


அங்கு வைத்து நாங்கள் வெட்டவில்லை என்றாலும் அடுத்தடுத்து வழியில் பல இடங்களில் நின்று கொண்டிருந்த எங்கள் ஆட்கள் நிச்சயமாக ஜோசப்பை வெட்டி கொலை செய்திருப்பார்கள்" என சாண்டில்யன் வாக்குமூலம் அளித்திப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து சாண்டில்யனிடமும், மற்ற குற்றவாளிகளிடமும்  ஜோசப்பை கொலை செய்ய தூண்டியவர்கள் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பன போன்ற தகவல்களை  பற்றி விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.