Skip to main content

சட்டமன்றத்துக்குள் அனுமதிக்காவிடில் சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்: நியமன எம்.எல்.ஏக்கள்!

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
mla


புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக மத்திய அரசு நியமனம் செய்தது. ஆனால் இந்த நியமனம் விதிமுறைகள்படி நியமிக்கபடவில்லை எனக்கூறி சபாநாயகர் வைத்திலிங்கம் இவர்களுக்கு சட்டசபையில் இருக்கை ஒதுக்கவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து சட்டசபைக்குள் செல்ல முயன்ற நியமன எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 

 

இந்நிலையில் நேற்று ஆளுநர் கிரண்பெடி காலாப்பட்டில் உள்ள சாசன் கெமிக்கல் தனியார் மருந்து தொழிற்சாலையில் நிலத்தடி நீர் அதிக அளவு எடுக்கப்படுவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறையாக நடைபெறவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்ததையடுத்து அங்கு ஆய்வு நடத்தினார். பின்னர் கடற்கரை சென்றவர் தூய்மை பணியை மேற்கொண்டார்.
  kiran


அப்போது கிரண்பெடி நிருபர்களிடம், "நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளரை நியமன எம்.எல்.ஏ.க்கள் அணுகலாம். சட்டப்பேரவைக்கு அவர்கள் செல்லலாம். அவர்களுக்கு அங்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.

அதையடுத்து நேற்று பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி 3 பேரும் சட்டசபைக்கு சென்று சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து, உயர்நீதிமன்ற உத்தரவு நகலை கொடுத்து, தங்களை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
 

mla


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சட்டசபைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இதன் மூலம் நியமன எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது மறைமுக பொருள். எனவே அதன்படி சட்டசபைக்குள் அனுமதிக்கக்கோரி முதல்வர், சபாநாயகர், கவர்னர், தலைமை செயலர், சட்டமன்ற செயலர் ஆகியோரிடம் நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம்.

 

 

எங்களை சட்டசபைக்குள் அனுமதிக்காமல் தடுக்கக்கூடாது. தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். வருகிற 16-ஆம் தேதி சட்டசபையில் அனுமதிக்கவில்லை என்றால், 19-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்" என்றார்.

மீண்டும் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் சூடு பிடித்துள்ளதால் அடுத்த வாரம் புதுச்சேரி அரசியலில் அனல் பறக்கும்.

சார்ந்த செய்திகள்