கரோனா பாதித்தவர்களை கண்டறியும் நோக்கில் அரசு பேருந்துகளை நடமாடும் மருத்துவ மையங்களாக மாற்றி வருகிறது கர்நாடக அரசு.
இந்தியாவில் கரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மே மூன்றாம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவிலான பரிசோதனை மையங்கள், சிறப்பு மருத்துவமனைகள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் பெட்டிகளை கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகிறது இந்திய ரயில்வேத்துறை.
ரயில்வே துறையின் இந்த யோசனையை பின்பற்றி அரசு பேருந்துகளை நடமாடும் மருத்துவ மையங்களாக மாற்றி வருகிறது கர்நாடக அரசு. படுக்கை வசதி, சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் வைக்க இடம், மின்விசிறி ஆகியவை பொருத்தப்பட்டு இந்த சிறப்பு மையங்கள் தயாராகி வருகின்றன. ஒரு அரசு பேருந்தை இதுபோன்று மாற்றியமைக்க 50,000 ரூபாய் செலவாவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸால் கர்நாடக மாநிலத்தில் இதுவரை 489 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.